Wednesday, March 24, 2010

ஷாஜியின் கட்டுரையும் விவாதமும்

இளையராஜா: நேற்றும் இன்றும் - ஷாஜி
மிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
மேதைகளை உருவாக்குவதில்லை.
மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
- மொஸார்ட்

சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!

ரோஷனும் மதன் மோகனும் மிகச்சிறந்த நண்பர்கள். தன்னிடம் மதன் மோகனை அறிமுகப்படுத்தி வைத்தவரே ரோஷன் தான் என்று ஜெயதேவ் குறிப்பிட்டிருக்கிறார். ஜெய்தேவ் அந்த காலகட்டத்தின் இன்னொரு அசாதரணமான இசையமைப்பாளர். இம்மூவரின் நட்பின் ஆழத்தைப்பற்றி அக்டோபர் 2009 உயிர்மையில் வெளியான 'ஜெய்தேவ், தனித்த இசைப்பயணி' என்ற எனது கட்டுரையில் நீங்கள் வாசித்தறியலாம். இளையராஜாவை போன்ற ஒரு மேதை தனக்கு நன்கு அறியாத ஒரு விஷயத்தை ஒரு மாபெரும் மேடையில் எப்படி சொன்னார் என்ற குழப்பத்தில் நான் மூழ்கி இருக்கும்போது இன்னுமொரு சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்தில் வெளியான அவரது 'பழசிராஜா' சினிமாப் பாடல்களின் தோல்விக்கு காரணம் பாடலாசிரியர் ஓ என் வி குரூப்பின் பாடல்வரிகள் சரியில்லாததே என்று தெரிவித்தார் இளையராஜா!

ஓ என் வி குரூப் மிகவும் பிரபலமான மலையாளக் கவிஞர். மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பல மலையாள சினிமாப்பாடல்களையும் எழுதியவர். மரபான விருத்தங்களில் பல சிறந்த கவிதைகளை எழுதியிருந்தவர் ஆயினும், முன்னால் போடப்பட்ட மெட்டுக்கு ஏற்ப சிறந்த பாடல்களை அவர் எழுதியவர் அல்ல. இதற்கு முன்னும் பல படங்களில் குருப்புடன் இணைந்து பணியாற்றிய இளையராஜாவுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இருப்பினும் வரிகளால் எப்படி இசையின் தரத்தை குறைக்க முடியும்? குருப்பின் வரிகளை வைத்துக் கொண்டு தானே என்றென்றும் நிலைத்திருக்கும் இனிய பல மலையாளப் பாடல்களை மறைந்த சலில் சௌதுரி உருவாக்கியிருக்கிறார்? சலில்தா ஏன்? இளையராஜாவின் புகழ்பெற்ற பல மலையாளப்பாடல்கள் அவரால் எழுதப்பட்டது தானே?

இதைப் படித்தாலேயே பல இளையராஜா ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் வரும். ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு கடவுள். அந்த கடவுள் ஒருபோதும் எந்த விஷயத்திலும் தவறுசெய்ய மாட்டார். அத்தகைய பல இளையராஜா ரசிகர்கள் பழசிராஜா படத்தின் இசை மிக சிறப்பானதென்றும், இளையராஜா சமீபத்தில் இசையமைத்த மற்ற சில மலையாள சினிமாக்களின் இசை அதைவிட சிறப்பானதென்றும் எல்லாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவருக்கு என்னுடைய பதில் என்னவென்றால், இப்பாடல்களைப் புகழ்வதன் மூலம் நீங்கள் ஒன்றை தெளிவாக்குகிறீர்கள். இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த திரை இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையின் சாரத்தையும் அதன் மந்திரஜாலத்தையும் நீங்கள் ஒருபோதும் புரிந்துகொண்டவர்களில்லை.

மைக்கேல் ஜாக்ஸனை 'பாப் இசையின் அரசன்' (King of pop) என்று சொல்வதைப்போல் இளையராஜாவை 'நாட்டுப்புற இசையின் அரசன்' (King of folk) என்று சொல்வேன். நாட்டுப்புற இசைதான் இசையின் மிக தூய்மையானதும் உணர்ச்சிகரமானதுமான வடிவம். அதுவே ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஏழை மக்களின் இசை. அது கிராம வாழ்க்கையின் உணர்ச்சிகளும், ஆசைகளும் பிரதிபலிக்கும் இசை. வெவ்வேறு கிராமங்களின் சிறப்பியல்புகளையும் இனிமைகளையும் வெளிப்படுத்துகிறது அது. இயல்பும், ஆற்றலும், ஊக்கமும் நிறைந்த மனித உணர்வெழுச்சிகள் இந்த கிராமிய இசையின் தனித்துவமான வெளிப்பாட்டில் தான் நாம் கேட்க முடியும்.

பிறப்பு, இறப்பு, பூப்படைதல், நிச்சயதார்த்தம், திருமணம் என கிராம வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்குமான நாட்டுப்புற இசை வெளிப்பாடுகள் இருக்கின்றன. விவசாயம் சார்ந்த உழுதல், விதைத்தல், நாற்று நடுதல் மற்றும் அறுவடைக்காலங்கள், கோயில் விழாக்கள், மதம் சார்ந்த மற்ற பண்டிகைகள் போன்றவற்றில் எல்லாம் இந்த இசைதான் ஓங்கி ஒலிக்கிறது. தங்களின் நம்பிக்கைகளை, அச்சங்களை, எதிர்பார்ப்புகளை, கொண்டாட்டங்களை உடைந்ந குரல்களில் கிராமிய இசைக்கலைஞர்கள் பாடுகிறார்கள். கிராமங்களிலும் வனங்களிலும் கிடைக்கும் விலங்குகளின் தோல், மரம், மூங்கில், கொட்டாங்கச்சி, சுரைக்குடுவை, மண்பானை போன்றவற்றில் எல்லாமிருந்து தங்களின் இசைக்கருவிகளை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கிராமங்களில் சுற்றித்திரிந்த காலங்களில் சொந்தமாக மூங்கிலில் புல்லாங்குழல்களைச் செய்து அதை வாசிப்பவராக தான் இருந்ததை இளையராஜா பதிவு செய்திருக்கிறார்.

நாட்டுப்புற இசை கிராமங்களில் யாராலும் பயிற்றுவிக்கப்படுவதல்ல. இவ்விசையக் கற்றுக்கொள்ள தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் மாணவர்களோ கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களோ அங்கில்லை. அவர்களின் ஏழ்மை இத்தகைய வசதிகளை அவர்களுக்கு வழங்குவதில்லை. செல்வந்தவர்களின் விவசாய நிலங்களில் அன்றாடம் உழைத்தோ, தங்கள் சிறிய நிலத்தில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்தோ அல்லது இதர சில்லரை வேலைகள் செய்தோ தமக்கான இரண்டுவேளை உணவைப்பெறும் ஏழை மக்கள்தான் அங்கு நாட்டுப்புற இசைக்கலைஞர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரே ராசையா என்ற இயற்பெயர் கொண்ட இளையராஜா. தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளையராஜா விவசாய தினக்கூலியாக வேலை பார்த்தவர். எட்டாவது வரையே பள்ளிக்கல்வி பெற்றவர். எவ்வித நோக்கமுமில்லாமல் நாட்டுப்புற இசையை தொடர்ந்து கவனித்துக் கேட்டுக் கற்றுக்கொண்டு, அதன் நுட்பங்களைக் கிரகித்துக் கொண்டவர். அவரின் தாயார் எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களின் சேமிப்புக் கிடங்காக இருந்தவர். சிறுவயதிலிருந்து கேட்டறிந்த அப்பாடல்கள் தான் அவருடைய நுட்பமான இசையுணர்வை வடிவமைத்தது, பின்னற் அவரது இசை ஆளுமையை தீர்மானித்தது. பல்வகைப்பட்ட நாட்டுப்புற இசை வடிவங்களையும் கிராமிய இசையின் உயிரோட்டமான உணர்ச்சிகளையும், இங்கு இசை கேட்கும் அத்தனைபேரின் அறைகளுக்குள்ளும் கொண்டுவந்து சேர்த்த முதல் இந்திய திரையிசையமைப்பாளர் இளையராஜா தான்.

இந்திய நாட்டுப்புற இசை¨யோடு மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து என்றும் அழியாத பல பாடல்களை முதலில் உருவாக்கியவர் சலில் சௌதுரி.1940களிலேயே அவர் அதைச் செய்தார். ஆனால் அவரது அரிதான இசை பெரும் வணிக வெற்றிகளை அடையாமல் போயிற்று. கிராமிய இசையுடன் மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து இளையராஜா உருவாக்கிய திரைப் பாடல்களோ அவரை தமிழ் சினிமா இசையின் பேரரசனாக எழுபதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கோலோச்ச வைத்தது.

நாட்டுப்புற இசையைப்போலவே மேற்கத்திய இசையை நோக்கிய தேடுதலும் சிறுவயதிலிருந்தே இளையராஜவிடம் முளைவிட்டிருந்தது. அவரின் குடும்பத்தினர் அப்போது கிறிஸ்துவ மதத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மேற்கத்திய செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பல கிறிஸ்துவப் பாடல்களை கேட்டு வளர்ந்த அவருக்கு அவ்வடிவத்தை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது தேவாலய நிகழ்சிகள். பிறகு, சென்னையில் இசையாசிரியர் தன்ராஜ் மாஸ்டர் மேற்கத்திய இசையின் நுட்பமான வேறுபாடுகளையும், சிக்கல்களையும் அவருக்கு பயிற்றுவித்த்தார். செவ்வியல் கிதார் இசையிலும் பியானோ இசையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவராக இளையராஜா விளங்கினார். அவரது பாடல்களில் பியானோ, கிதார் மற்றும் வயலின் குழுவை அவர் பயன்படுத்திய விதம் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் அவருக்கிருக்கிற ஆழ்ந்த புரிதலுக்கும் புலமைக்கும் சான்றாக இருக்கிறது.

சலில் சௌதுரி உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிதார் மற்றும் காம்போ ஆர்கன் வாசிப்பாளராக பலவருடம் பணியாற்றியது இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் ஆவதற்குறிய மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இருநூறுக்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியபோது கிடைத்த படைப்புச் சுதந்திரமும் அவரை முக்கியமான இசையமைப்பாளராக உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது.

நாட்டுப்புற மேற்கத்திய இசைக் கலவையுடன் கர்நாடக செவ்வியல் ராகங்களையும் அதிகளவில் அவர் பாடல்களில் பயன்படுத்தினார். சாதாரண இசை ரசிகர்களும் விரும்பும் வண்ணம் கடினமான ராகங்களை கூட காதுக்கினிய வடிவங்களில் கொடுத்தார் இளையராஜா. சினிமாவுக்கு இசையமைக்கத்தொடங்கிய முதல் ஆண்டிலேயே (1976) நாங்கு படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் பல மடங்காகி வளர்ந்து 1992ல் 56 படங்களென்று ஆகாயத்தை தொட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் அவரது பாடல்கள் மட்டும் தான் ஒலித்தது.

மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவில் பல படங்களிலும் அவ்வப்போது ஹிந்தியிலுமாக பல வருடங்களாக சினிமா இசையை ஆட்சி செய்தவர் இளையராஜா. சிக்கலான ஆனால் இனிமையான மேற்கத்திய இசை ஒழுங்குகளாலும், நுட்பமானதும் நவீனமானதுமான பேஸ் கிதார் உபயோகத்தாலும் திரைப் பாடல்களின் பின்னணி இசையை ஒரு மறுமலர்ச்சிக்கு உட்படுத்தியவர். அத்தகைய இசையின் வாயிலாக கருவியிசையை விரும்பும் இசை ரசிகர்களுக்கு பல விருந்துகளை படைத்தவர் அவர்.

திரை இசையில் தனது முதல் பத்தாண்டுகளில் இளையராஜா உருவாக்கியது ஒரு மந்திரஜாலம். அபாரமான படைப்பூக்கத்தால் புதிய சோதனை முயற்சிகளை துணிச்சலோடு உருவாக்கினார். தனது தரமான பல பாடல்களை பொது மக்களால் பெரிதும் விரும்பவைத்தார். முதல்முதலாக அவர் இசை அமைத்த திரைப் பாடல்களைப்பாருங்கள்! 'அன்னக்கிளியே உன்னைத் தேடுதே', 'மச்சானைப்பார்த்தீங்களா', 'சொந்தம் இல்லை பந்தம் இல்லை' (அன்னக்கிளி), 'கண்ணன் ஒரு கைக்குழந்தை', 'ஒத்த ரூபா உனக்கு தாரேன்' (பத்ரகாளி), 'நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி), 'ஒரு நாள் உன்னோடு ஒருநாள்' (உறவாடும் நெஞ்சம்)... நாட்டுப்புற துள்ளிசை, மனதை வருடும் மெல்லிசை, தரத்திலும் வணிகத்திலும் மாபெரும் வெற்றிகள்!

தொடர்ந்த பதினைந்து ஆண்டுகளில் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று புதிய பாடல்கள் என்ற கணக்கில் பாடல்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார் இளையராஜா. கருவிகளை வாசித்தோ, பாடலைப் பாடியோ பார்க்காமல் பாடலகளுக்கான முழுமையான இசைக்குறிப்புகளையும் எழுதி முடித்துவிடும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அதிகாலையில் ஸ்டூடியோவுக்கு வந்ததும் சிலமணிநேரங்களில் அன்றைய நாளின் பதிவுக்குத் தேவையான இசையை அவர் எழுதி முடித்திடுவார். எழுதிமுடிக்கப்பட்ட குறிப்புகள் கருவி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு வழங்கப்பட்டு பாடல் பதிவு சட்டென முடிந்துவிடும். ஒருங்கிணைப்பு, ஒலிக்கலவை போன்ற பணிகள் மீதி நேரத்தில் முடிந்துவிடுவார். இவ்வாறாக இளையராஜாவின் பணியிடமான சென்னை பிரசாத் ஸ்டூடியோ ஒருவகையான பாடல் உற்பத்தித் தொழிற்சாலையைப்போல் மாறியது.

அவர் பணிபுரிந்த ஏறத்தாழ எல்லாப் படங்களுக்கும் பிண்ணனி இசையையும் அவரே அமைத்தார். எண்ணிகையில் அதிகப்படியான பாடல்களுடன் விரைவாக படங்களின் பின்னணி இசையையும் முடித்து விடும் அவரின் பணிசெய்யும் வேகத்தையும் ஒழுங்குமுறையையும் பார்த்து அனைவரும் வியந்து போனார்கள். நூற்றுக்கணக்கான அற்புதமான பாடல்களை தந்தார். அவற்றில் ஏறத்தாழ எல்லாப்பாடல்களையும் அவை இடம்பெற்ற படங்களையும் எல்லோரும் அறிந்திருக்கும் என்பதால் அதை இங்கு பட்டியலிடுவது பயனற்ற செயலாகும். மேலும் இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட எந்தக்கலைஞனும் இல்லை. ஏனெனில் எந்தவொரு கலையையும் அதை ரசிப்பவர்களின் ஒப்புதலுக்காகவும், பாராட்டுதலுக்காகவும், மதிப்பீட்டுக்காகவுமே உருவாக்கப்படுகிறது. எண்பதுகளில் வெற்றியின் சிகரத்தைத் தொட்டபிறகு இளையராஜாவும் விமர்சனத்தை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

கொஞ்சகாலம் முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் நான் 'இளையராஜா ஒரு வரலாற்று நிகழ்வு' என்ற ஒர் கட்டுரை எழுதினேன். ஆனால் இளையராஜா சமீபத்தில் இசையமைத்த பழசிராஜா (மலையாளம்), நன்னவனு (கன்னடா), பா (இந்தி) போன்ற படங்களின் இசையை மதிப்பிட்டுப் பார்க்கும்போது இளையராஜாவின் இசையின் தரமும் அதன் பொற்காலமும் வரலாறாகிவிட்டதா என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. கடந்த பல வருடங்களாக வந்துகொண்டிருக்கும் அவரது பல பாடல்கள் இளையராஜா தன்னுடைய படைப்பாற்றலின் உச்சத்தை இழந்து பலகாலம் ஆகிவிட்டது என்பதை உறுதி செய்கிறது. ஆனால் முன்சொன்ன மாதிரியான அவரது ரசிகர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

அடிப்படையில் நன்றாக அமையும் சில பாடல்களில் கூட இன்றைக்கு அவரது இசை அழகியல் தவறவிடப்படுகிறது. உதாரணமாக பழசிராஜாவில் 'அம்பும் கொம்பும்' எனத் தொடங்கும் பழங்குடிப் பாடல் ஒன்றுள்ளது. இந்திய திரையிசையில் நான் கேட்ட மிகச்சிறந்த பழங்குடிப் பாடல்களில் ஒன்று இது. பழங்குடியினருக்கேயுரிய பின்னணிக் குரல்கள், ஒலிகள், தனித்துவமான வாத்தியங்கள் என மிகவும் நுட்பமாய் செதுக்கப்பட்டிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் சமீபத்திய சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.

இளையராஜாவும், குட்டப்பன் என்கிற நாட்டுப்புறப் பாடகர் ஒருவரும் மஞ்சரி என்ற பாடகியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். சமீபகாலமாக இளையராஜாவின் பல பாடல்கள் பாடிவரும் மஞ்சரி சராசரிக்கும் குறைவான ஒரு பாடகியே. ஏறத்தாழ எல்லாமே சரியாக இணைந்திருந்தும் இப்பாடலில் மஞ்சரி பாடியிருக்கும் விதம்தான் ஒரு பெரும் குறை. எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடுமில்லாமல் பாடும் மஞ்சரியின் குரல், எந்தவகையிலும் அப்பாடலின் பழங்குடி உணர்ச்சிக்கு ஒத்துவரவில்லை. அனால் இந்த பாடலையே யாரும் கவனிக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

பா படத்தின் பாடல்களும் ஒன்றும் சிறப்பானதல்ல. சில்பா ராவ் என்ற சராசரி பாடகி எந்த ஒரு உனர்ச்சிவெளிப்பாடும் இல்லாமல் பாடிய 'முடி முடி கஹா கஹா மே முடி முடி' என்ற பாடல் 'முடி முடி உடி உடி லடி லடி கடி கடி' போன்ற சத்தங்களால் கவனத்தைக் கவரும் ஒரு வீண் முயர்ச்சியே. இப்படத்தில் உள்ள 'கும் கும் ஸும்' என்ற பாடல் 'தும்பீ வா தும்பக்குடத்தின்' (படம் - ஓளங்ஙள் -1982) என்ற மலையாளப்பாடலின் புதிய வடிவம். இது என்னுடைய எப்போதைக்குமான விருப்பத்துக்குறிய ஓர் இளையராஜாப் பாடல். இது பின்னர் தமிழில் 'சங்கத்தில் பாடாத கவிதை' என்றும் வெளியானது. அப்பாடலை இக்காலத்திற்கேற்ப மாற்றியமைக்கும் முயர்ச்சி அப்பாடலின் உண்மையான சாரத்தைச் சிதைத்துவிட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, இதே பாடல் கேனடாவின் பாப் இசைக்குழுவான The Four Lads 1953ல் வெளியிட்ட Istanbul, Not Constantinople எனும் பாடலின் நகல் என்றதொரு விமர்சனம் இப்போது இணையப்பக்கங்களில் வலம்வருகிறது.

இளையராஜா தனது வெளிவராத பழைய பாடல்களை புதிய கன்னட படங்களில் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட வார இதழொன்று எழுதியிருந்தது. ஆனால் 'நன்னவனு' படத்தின் பாடல்களைக் கேட்டால் இது தவறென்று தெரியவரும். இப்படத்தில் வரும் பாடல்களோடு ஒப்பிட்டால் அவரது எந்த ஒரு பழைய பாடலுமே அரிதானது என்று தெரியவரும். இப்படத்தின் சில இசைத் தருணங்கள் இளையராஜாவின் பழம்பெருமையை நினைவுபடுத்துவதைப்போல் இருந்தாலும் அவற்றின் தரம் சராசரிக்கும் கீழேதான் என்று உணர்வதைத் தடுக்கமுடியவில்லை. எந்த ஒரு கலைஞனுமே முடிவற்ற படைப்பாற்றலைக் கொண்டிருக்க முடியாது என்ற உண்மையையும் இங்கு நாம் ஒத்துக்க வேண்டும்.

மொஸார்ட், பாக், பீத்தோவான் மூவருமே தனது குருமார்கள் என்று இளையராஜா கூறியதாக அறியநேர்ந்தது. ஐரோப்பாவில் அவர்கள் வாழ்ந்த இடங்களை எல்லாம் ஒரு புனிதப்பயணம் மேற்கொள்வதுபோல சென்று வந்திருக்கிறார். ஆனால் அவர்களின் மனித இயல்பை இளையராஜா உணர்ந்துகொண்டாரா என்று தெரியவில்லை? மொஸார்ட் தன்னை எப்போதாவது "நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நான் ராஜா” என்று கருதிக் கொண்டிருந்தாரா என்றும் தெரியவில்லை.

உதாரணமாக, இளையராஜா பாப் மார்லி, பாப் டிலான் இருவரையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டவர். அவர்களை 'குப்பை' என்று குறிப்பிட்டவர். எந்த ஒரு கலைஞனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்ற முறையில் அவருக்கு விமர்சிக்கும், நிராகரிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தங்களது இசையால் மிகப்பெரும் சமூக மாற்றத்தையும் அத்துடன் முழுமையான இசையின்பத்தையும் வழங்கிய இவ்விருவரின் தகுதியும் இளையராஜாவின் இந்த விமர்சனத்தால் குறைந்துவிடாது. இருவரும் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் விதந்தோதுபவர்களையும் கொண்டிருந்தனர். இந்த நிமிடம் வரை அதிகளவில் விற்பனையாகும் பல இசைத்தொகைகளை கொடுத்த கலைஞர்கள்.

பாப் டிலான் இளையராஜாவை விட இரண்டு வயது மூத்தவர். இன்னும் தனது பாடல்களாலும் இசையாலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். சமீபமாக டிலானின் பிறந்தநாள் இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில் கூட ஒரு மாதம் முழுதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று வாசித்தது ஞாபகம் வருகிறது.

தனது முப்பத்தி எட்டாவது வயதில் மறைந்துவிட்ட ரேகே இசை அதிசயம் பாப் மார்லி இளையராஜாவை விட இரண்டு வயது இளையவர். மிகவும் ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட குடும்பச்சூழலில் பிறந்தவர். இளையராஜாவை விட துயரம் நிறைந்த ஒற் பால்யகாலத்தைக் கழிக்க நேர்ந்தவர். மோட்டார் பழுதுபார்க்குமிடத்தில் உதவியாளராகவும், தெருக்கூட்டுபவராகவும் பணிபுரிந்தவர். ஆனால் இவ்வுலகை விட்டுப் பிரியும் முன் தனது மக்களின் துயரமிக்க வாழ்வினை உயர்த்தும் ஏராளமான பணிகளைச் செய்துவிட்டுச் சென்றவர். உலகநட்சத்திரமாக மாறிய பின்னரும் தன் வேர்களில் இருந்து பிரியாதவர். ஏழைகளுக்கு தடையிலாது உதவிய மனிதர். அவர் இறந்தபோது கிட்டத்தட்ட நாலாயிரம் ஜமைக்க குடும்பங்கள் அவரை நம்பி இருந்தன!

பொதுவான கலை விமரிசன மரபில் இரண்டு தரப்புகள் உள்ளன. ஒருவரின் கலைப்படைப்பை விமர்சிக்கும்போது கலைக்கு அப்பாற்பட்ட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் ஒன்று. ஒரு கலைஞனின் வாழ்க்கை வழியாக அவனது கலையை, இசையை சென்றடைய முயல்வது தான் இன்னொன்று. Art without heart is futile அதாவது நல்லதோர் இதயம் வெளிப்படாத கலை வீண்போகும் என்பது தான் இந்த விமரிசன மரபின் சாரம். நல்ல உள்ளத்திலிருந்தே நல்ல கலையும் வருகிறது என்ற அந்த தரப்பைத்தான் என் இசைவிமரிசன எழுத்து வழியாக நானும் முன்வைக்க முயல்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னதைப் போல, "சிறந்த கலை இவ்வுலகத்தை பாதுகாக் கூடுகும்".

லட்சக்கணக்கான நசுக்கப்பட்ட ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கையில், ஐம்பது லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை கோவில் பிரதிஷ்டைகளுக்கு அணிவிப்பதால் நீங்கள் சிறந்த மனிதர் ஆகிவிடுவீர்களா? லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு 12 கோபுரங்கள் இருக்கும் ஒரு கோவிலுக்கு 13ஆவது கோபுரம் ஒன்றை கட்டுவதன் மூலம் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது திருவாசகம், ரமணமாலை போன்ற பக்திப்பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது பசியும், வறுமையும் தீர உதவுமா?

அதிகாரமும், வசதியும் படைத்த பலரும் தன்னுடைய கட்டளைக்கு செவிசாய்க்கும் நிலையில் இருக்கும்போது ஏழை, அடித்தட்டு மக்களுக்குத் தேவையான சிலதை எந்த ஓர் ஆன்மீகவாதியாலையும் செய்ய முடியும் அல்லவா? ஆன்மீகம் என்றால் என்ன? மக்கள் சேவையே மகேசன் சேவை என இந்திய ஆன்மீகம் சொல்லவில்லையா?

இசைக்கு வருவோம். தனது திரையிசைப் பயணத்தின் முதல் பத்தாண்டுகளில் தொடர்ந்து உணர்வு பூர்வ்மான இசையை உருவாக்கி வந்த இளையராஜா சமூகத்திடம் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு ஆன்மீகவாதியாக ஆகும் முயற்சியில் ஓர் சாமியார் போல் ஆகிவிட்டார். மழித்த தலையும், பட்டை விபூதியும், வெண்ணிற ஆடைகளும் அவரது அடையாளமாக மாறிப்போனது. காலையில் ஒலிப்பதிவுக்கூடத்துக்குச் செல்வதும் இரவுவரை முக்கியமற்ற பல படங்களுக்கு எண்ணற்ற பாடல்களும் பிண்ணனி இசையும் அமைப்பதாக ஆகிவிட்டது அவரது வாழ்வு. அப்படித்தான் அவர் 1992 ஆம் வருடத்தில் அதிகபட்சமாக 56 படங்களுக்கு இசையமைத்தார். அதிகளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டியிருந்தால் அது பீத்தோவனாகவே இருந்தாலும் தரமானதாக இருக்க இயலாது என்பதைக் கூறத்தேவையில்லை.

ஆத்மபூர்வமான இசை என்பது தொழில்நுட்ப அறிவோ இசையின் கணித சூத்திரங்களோ அல்ல என்பதர்க்கு இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்கள் சிறந்த உதாரணங்களாகும். அவர் ஓருமுறை சொன்னதுபோல குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒலிக்கும் எந்த ஒரு ஒலியின் சேர்க்கையும் சிறந்த இசையாகிவிடவும் முடியாது. இசையென்பது உள்ளத்தால் உணர்ந்துகொள்ளப்படும் ஒரு உணர்வு. அந்த மகத்தான கலையை ஒருவன் பணிவோடும், நேசத்தோடும், திறந்த மனதோடுமே அணுகவேண்டும். 'எப்பவும் நான் ராஜா' என்பது போன்ற மதிமயக்கங்களால் சிறந்த இசையை உருவாக்கிவிட இயலாது. இளையரஜா இசையமைத்து லோகித தாஸ் தமிழில் இயக்கிய 'கஸ்தூரிமான்' படத்தில் கூட ஒரு பாடலில் சம்பந்தமில்லாமல் "ராஜா உந்தன் ராஜாங்கத்தில் நாளும் நாளும் இசைதான்" என்ற ஒரு வரி வருகிறது!

என் அறிவுக்கெட்டியவரையில், இளையராஜா தன் சமகால இசையமைப்பாளர்கள் எவருடைய படைப்புகளையும் இசையாக கருதியது கிடையாது. பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் மீதான இளையராஜாவின் சகிப்புத்தன்மையற்ற போக்கை நேரடியாகக் கண்டிருக்கிறேன். கஸ்தூரிமான் படத்தில் பாடுவதற்காக இளம்பாடகர்கள் இருவரை லோகித தாஸ் பரிந்துரை செய்தார். குரல் சோதனைக்காக இருவரும் சென்றனர். இளையராஜாவைச் சந்தித்த இருவரும் காலில் விழுந்து மரியாதை செய்தனர். வித்யாசாகர் இசையில் தான் பாடிய பாடலை ஒருவரும், மோகன் சித்தாரா எனும் மலையாள இசையமைப்பாளரிடம் பாடிய பாட்டை மற்றவரும் போட்டுக்காட்டினர். இரண்டையும் கேட்ட இளையராஜா கோபம் கொண்டார். இரண்டு பாடல்களும் தனது பாடல்களின் நகல் என்று அவர் கருதினார். "தென்னிந்தியாவில் உங்களது ஆதிக்கம் இல்லாமல் எந்த இசையமைப்பாளரும் இசையமைத்துவிட முடியாது” என லோகித தாஸ் சமாதானப்படுத்த முயன்றார். உடனே இளையராஜா கோபமாக, "எனது இசையைக் காப்பியடிக்கும் நச்சுச் சூழலை ஆதரிக்கிறீர்களா"? என்றார். மட்டுமல்லாமல் அந்த இரு பாடகிகளுமே தனது பாடல்களைப் பாட தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்டனர்!

இதில் கேள்வி என்னவென்றால், இளையராஜா இசையமைத்த 4500க்கும் மேற்பட்ட பாடல்கள் யாவுமே தனித்துவமானவையா? அவரது அனைத்துப் பாடல்களுமே முழுமையாகவே அசலானதா? எனில், உப்கார் (Upkaar) எனும் இந்திப் படத்தில் வந்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த 'கஸ்மே வாதே பியார் வஃபா' எனும் பாடலின் நேரடியான நகலாக 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' (நீங்கள் கேட்டவை) என்ற பாடல் வந்தது எப்படி? சின்னவீடு படத்தில் இடம்பெற்ற 'சிட்டுக்குருவி' என்ற பாடல் செக்கோஸ்லாவாகியாவைச் சேர்ந்த செவ்வியல் இசையமைப்பாளர் Antonin Dvorak இன் சிம்பனி 9 போலவே ஒலிப்பது எப்படி? 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு' (முரட்டுக்காளை) எனும் பாடலின் பல்லவி சமகால மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் Antonio Ruiz Pipo வின் Cancione et Danza என்ற பாடலைப் போலவே எப்படி அமைந்தது? Abba, Boney M போன்ற டிஸ்கோ பாப் குழுவினரின் பாடல்களைப் போன்ற சில பாடல்களையும் இளையராஜா அமைத்ததில்லையா?

ஒப்புமைகள் தெளிவாக இருந்தாலும், இப்பாடல்களை இளையராஜா காப்பியடித்தார் என உணர்வுபூர்வமான இசை ரசிகர்கள் யாரும் கூறமாட்டார்கள். ஏனெனில் இன்னொரு மேலான படைப்பை விரும்புவதும், அதனால் கவரப்படுவதும், வியப்படைவதும், உந்தப்படுவதும் ஒரு கலைஞனின் உரிமையாகும். அதைப்போலவே இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு புதியவர்கள் இசையமைத்தால் அதில் தவறொன்றுமில்லை. ஏனெனில் அவரது பாடல்கள் தென்னிந்தியாவின் பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வித படைப்பூக்கமும் இல்லாமல் அப்படியே உருவிக் கொடுப்பதுதான் கண்டிக்கப்பட வேண்டிய கலைத்திருட்டு என்பது.

எனது இசையுணர்வுக்கு பட்டதை சொல்கிறேன். இளையராஜா தொடர்ந்து வாய்ப்பளித்த பாடகர்கள் பலரும் மிகச்சிறந்த பாடகர்களாக தங்களை வெளிப்படுத்தியவர்கள் அல்ல. கொடுக்கும் மெட்டை அப்படியே திருப்பிச்சொல்லுவதையே இளையராஜா தனது பாடகர்களிடம் எதிர்பார்த்தார். பாடகன் அளிக்கும் நுணுக்கங்கள் அங்கே ஒரு பொருட்டே அல்ல. கொடுக்கப்பட்ட குறிப்பிலிருந்து இம்மியளவும் விலகிச்செல்வதற்கு பாடகர்களோ இசைக்கலைஞர்களோ அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் பணிபுரிவதைப்போலவே இளையராஜா இந்திய திரைப்படங்களில் பணிபுரிந்தார் என்று தான் சொல்லவேண்டும். திரைப்படம் ஒரு கூட்டுக்கலை என்பதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. ஆனால் சினிமாவைப்போலவே அதன் இசையும் கூட்டுமுயற்சியில் உருவாகும் ஒரு கலை என்பதில் சந்தேகமேயில்லை.

ஒரு தொலைக்காட்சி ஒலிபரப்பில் மேடைநிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமாகிய யுவன் சங்கர் ராஜா பாடுவதை பிண்ணனியில் ஆர்மோனியத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா. பாடினாரா அல்லது பேசினாரா என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்க்கு இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் பாடும்முறை! ஆனால் அப்போது இளையராஜாவின் முகத்தில் இருந்த பார்வை இருக்கிறதே, அதுவே நான் சமீபத்தில் பார்த்து மிகவும் சங்கடமடைந்த காட்சி.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதைப்போல இளையராஜா அவருடைய உண்மையான தகுதியைக் காட்டிலும் குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறார். முரண் என்னவென்றால் இளையராஜா தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டார் என்பது தான். அவர் தன்னை ஒருபோதும் கண்டடைந்ததில்லை.

கொஞ்ச காலத்திற்கு முன்பு நேர்காணல் ஒன்றில், தனது திறமையெல்லாம் சினிமா இசையிலே வீணடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். உண்மை தான்! உலகத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வருவதற்குண்டான மேதமை கொண்டிருந்தவர் அவர். இந்தியாவில் வேறு யாரைக்காட்டிலும் அவருக்கே அதற்குண்டான அனைத்துத் தகுதியும் இருந்தது.

இசைக்கு மொழியோ நாடோ தடையில்லாத நிலையில் பாப் மார்லியைவிட பெரும் உலகப் புகழை இளையராஜா அடைந்திருக்கலாம். ஆனால் யாருடனும் சேர்ந்தியங்காமல் தன்னை மூடிவைத்தவராக, ஓர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதைப்போல செயல்பட்டார் இளையராஜா. மேதமையும் வாய்ப்புகளும் ஒருசேர வாய்க்கப்பெற்ற இளையராஜா தனது இசை உலகளாவிய அளவில் பயணப்படுவதற்கான பரந்து விரிந்திருந்த சாத்தியங்களை கண்டுணராமல் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

35ஆவது வயதில் மரணமடைந்த மொஸார்ட் தன் குறுகிய வாழ்வில் நூற்றாண்டுகளை கடந்து நிற்க்கும் மகத்தான பல இசை ஆக்க்ங்களை உருவாக்கினார். தன் இருப்பும் இசையும் வழியாக இந்த உலகில் பல மாற்றங்களை உருவாக்க முடியும் என நம்பினார். அத்தகைய மாற்றங்களை உருவாக்குவதென்பது புரிந்துகொள்ளுதலில் ஆரம்பிக்கிறது. பிறருக்கு வழங்குவதில், பிறரை மதிப்பதில், மன்னிப்பதில், வாழ்வே அன்பாக ஆகிவிடுவதில் தொடர்கிறது. சிறந்ததொரு உலகத்தை உருவாக்குவதும், சிறந்த மனிதனாக வாழ்வதும் நிச்சயமாக சிறந்த இசை உருவாக்கத்தின் பகுதியே.

தமிழில் : முபாரக்


ஷாஜிக்கு ஒரு பதில் ... - சந்திரமோகன்
வன்மத்தோடு சிலரை குறிவைத்து எறியப்படும் விஷ அம்புகளின் வீர்யத்தை பார்க்கும்போது எய்தவனின் மன விகாரம் எப்படிப்பட்டது என்று தெரியும். அவ்வாறு குறி வைத்து தாக்கப்படும் மனிதர்களில் இளையராஜா முக்கியமானவர். என் வாழ் நாளில் நான் கண்டு பிரமித்த , பல ஆயிரம் பாடல்களாலும், திரைப்படத்திற்கான பின்னணி இசையாலும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் உருக வைத்த, மிக சிறந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளை இன்று வரை யாரும் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்பது என் வருத்தம். தங்களை தாங்களே அறிவு ஜீவிகள் என்று கருதிக்கொண்டு அவரின் இசையை இலத்தீன் அமெரிக்க இசை ஞானத்தோடு அணுகி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சில ஜீவன்களுக்கு மத்தியில் (இந்த அறிவு ஜீவிகள் சென்னை புத்தக கண்காட்சியில் அல்பேனிய புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கும் புத்திசாலிகள் ! அல்பேனிய புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க தெரியாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அறிவு ஜீவிகள்..!) ஷாஜி எனும் மனிதர் வேறு பட்டவராக இருக்கிறார். அவரும் இசை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில்லை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் பற்றிய குறிப்புகளில் மட்டுமே அவர் சிறந்தவர் என்பது அவரை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.

ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.

ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.

முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:
முதலில் பழசிராஜா பற்றிய அவரது 'எண்ணங்கள்'. ஷாஜி முதற்கொண்டு ராஜாவிடம் முன்பு வேலை பார்த்த அவுசப்பச்சன் போன்ற அனைவரும் அப்படத்தின் இசை தோல்வியடைந்தாக சொல்கிறார்கள். ஆதி உஷ, குன்னத்தே, அம்பும் கொம்பும் போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு படத்தின் இசையை தோல்வி என்று இவர்கள் என்ன அளவீட்டில் சொல்கிறார்கள்? பழசிராஜாவை பார்த்த பலர் சொன்ன கருத்து ஆஸ்கார் 'புகழ்' பூக்குட்டி தனது மேதைமையை பயன்படுத்தி ராஜாவின் இசையை தன 'சத்தத்தால்' பல இடங்களில் அமுக்கியிருக்கிறார் என்று . சமீபத்தில் தான் நானும் அப்படத்தை பார்த்தேன்.. தனக்கு கிடைத்த ஆஸ்காருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பூக்குட்டி ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த அவதியில் படத்தின் பின்னணி இசையை பல இடங்களில் தன சத்தம் கொண்டு அடக்கியிருக்கிறார். இது ராஜாவின் தோல்வியா? மிக முக்கியமாக , ஷாஜி போகிறபோக்கில் படத்தின் இசையின் தோல்விக்கு காரணமாக O.N.V குருப் பின் பாடல் வரிகள் அமைந்ததாக ராஜாவே சொன்னதாக குறிப்பிடுகிறார். இது அக்கிரமம். படத்தின் பாடல்கள் தோல்வி என்று ராஜாவே முடிவுகட்டியதாக நினைக்கிறாரா ஷாஜி? அவர் பேசிய பேச்சின் வீடியோ Youtube இல் கிடைக்கும்.கேட்டுப்பாருங்கள். வெள்ளையரை எதிர்த்ததால் இன்னல்களுக்கு ஆளாகி காட்டில் மறைந்து அங்கிருந்து போர் வியூகம் அமைக்கும் ஒரு மன்னரின் சோகத்தையும் அந்த பாடலில் கொடுக்க தெரிந்த ராஜாவையா நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள்? அந்த பாடலின் composing இல் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லும் நேரத்தில் O.N.V. குருப் தன tune க்கு எழுத முடியாமல் சிரமப்பட்டார் என்றார். இத்தனைக்கும் தன இசையில் புகழ் பெற்ற 'தும்பி வா' பாடலை எழுதியவர் அவர் என்று அந்த நேரத்திலும் குறிப்பிட்ட ராஜாவின் வார்த்தைகளை இப்படியா ஷாஜி திரிப்பீர்கள்? அதை தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைவரையும் 'நீளம்' கருதாமல் மலையாள 'பழசிராஜாவை' பார்க்குமாறும் வேண்டிக்கொண்ட ராஜாவை நீங்கள் அந்த வீடியோவில் பார்க்கலாம். இதற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா ? படத்தின் இயக்குனரான ஹரிஹரன் . O.N.V. விவகாரத்தில் ராஜா கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ..அது தனக்கும் M.T.V. நாயருக்குமான பொறுப்பு என்று திருவாய் மலர்ந்தார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அதை தொடர்ந்து ஒரு சினிமா விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும் இளையராஜா குறித்தும் , கேரளா அமைச்சர்கள் முதற்கொண்டு விமர்சனம் செய்ததை இங்கு உள்ளவர்கள் அறியவில்லை என்று நினைக்கிறாரா ஷாஜி? தொடர்ந்து மலையாள மனோரமா இளையராஜாவின் 'பா' இசையை ' recycle' செய்யப்பட்டவை என்ற 'உண்மையை' கண்டு பிடித்து எழுதுகிறது? எதற்காக? தன மண்ணின் கவிஞரான O.N.V பற்றி ராஜா விமர்சித்து விட்டாராம்? என்ன ஒரு ஒற்றுமை?
'பா' படத்தின் பாடல்கள் பால்கியின் விருப்பத்திற்காக ராஜாவால் திரும்ப உபயோகிக்கப்பட்டன என்று படத்தின் இசை வெளியிடுவதற்கு முன்பிருந்தே பால்கியாலேயே அறிவிக்கப்பட்டு வந்த செய்தி. இதை ஒரு விமர்சனமாக இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அடுத்து ஷாஜி குறி வைக்கும் ராஜாவின் மறுக்க முடியாத மென் பகுதி அவரது பின்னணி. ராஜாவை 'King of folk' (மட்டும் தான்) என்று தன நல்ல முகத்தின் பின் மறைந்திருக்கும் துவேஷதைக்கொண்டு குத்தி காட்டுகிறார். ராஜாவின் பின்னணி அறியாதவர்களா இசை ரசிகர்கள் ? அவரை பற்றி நீங்கள் ஆப்ரிக்க நாட்டிற்கா அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜா ஒரு தலித் என்று சொல்லி காட்டி அவரை பெருமைப்படுத்துவது போல் , 'பாருங்கள் ஒரு தலித் கூட இசை அமைக்கிறார்' என்று மறைமுகமாக அவரை தாழ்த்தும் சில 'பெருந்தன்மையாளர்களின்' பட்டியலில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா ஷாஜி?

தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இங்கு இழுக்க வேண்டியிருக்கிறது. ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹிந்து என்பதை தாண்டி .. இந்துவில் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ? அதை பற்றி யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளையராஜா ஒரு தலித் என்று மட்டும் தகவல் எழுதும் 'மனிதர்கள்' எல்லா கலைஞர்களின் பின்னணியையும் தானே எழுத வேண்டும்? ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி 'தலித்' என்னும் வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்து , அவர் தினக்கூலியாக இருந்தார் என்கிற வரைக்கும் எழுதுகிறார்? இப்போது தான் முதல் படத்திற்கு இசை அமைத்த ஒரு புது இசை அமைப்பாளரையா நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜாவை பற்றிய கட்டுரையில் அவரது பின்னணி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்னவந்தது?

மேலும் அவரது மேற்கத்திய இசைக்கு மூலம் அவர் 'ஒரு காலத்தில்' தலித் கிறித்துவராக இருந்ததாம். இதை நேரடியாக சொல்லாமல் பல வார்த்தைகளை போட்டு எழுதிகிறார் ஷாஜி. இது வன்மம் அல்லாமல் வேறென்ன?

இதை தவிர தன வன்மத்தை சமன் செய்ய ராஜா பற்றி அனைவரும் அறிந்த (அவர் ஒரே வருடத்தில் பல படங்களுக்கு இசை அமைத்தவர். 'நூற்றுக்கணக்கான' (!) அற்புதமான பாடல்களை தந்தவர்) போன்ற 'புத்தம் புதிய' தகவல்களை நமக்கு 'அளிக்கிறார்' ஷாஜி. ராஜாவின் பாடல்களையும் அவற்றின் தரத்தையும் அனைவரும் அறிந்திருப்பதால் அவற்றை பற்றி எழுத வேண்டியதில்லை என்றும் அதுவல்ல தனது கட்டுரையின் நோக்கம் என்று ' தன எண்ணத்தையும் நோக்கத்தையும்' தன்னை அறியாமேலேயே வெளிப்படுத்திவிட்டார் ஷாஜி. அவரது நோக்கம் ராஜாவின் 'அடாவடி தனங்களை' அம்பல படுத்துவது. அவரை ஒரு கொடுங்கோலராக சித்தரிப்பது.
வெளிநாட்டு இசை கலைஞன் ஒருவன் கொலை செய்து விட்டு வந்து ஆல்பம் போட்டாலும், "அந்த மாதிரியான ஒரு மன நிலைமையிலும் அவருக்கு எங்கிருந்து இசை வந்ததோ!" என்று சிலாகிக்கும் பாணி ஷாஜியுடையது. அவருக்கு பிடிக்க வேண்டுமென்றால் ஒரு இசை கலைஞன் , அகாலத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது.. வாழ் நாள் முழுதும் துயரத்தை அனுபவித்து பின்பு மாண்டிருக்க் வேண்டும். அவரது இசை (கலைஞர்கள்!) பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது எளிதில் புரியும். வெற்றிகரமாக வாழும் இசை கலைஞர்கள் அவரை பொறுத்தவரை 'வணிக ரீதியில் வெற்றி பெற்றவர்கள்' .
(அதிலும் அவருக்கென பிரத்தியேக விதிவிலக்கு ரஹ்மான்! )

இங்கே ராஜா ரசிகர்களை எல்லாம் ஒரு சேர கேவலப்படுத்துகிறார் ஷாஜி. அவரது ரசிகர்கள் அவரை 'கடவுளாக' நினைக்கிறார்களாம். அவரது பொற்காலமான எண்பதுகளில் இசை அமைத்ததை போன்று அல்லாமல் அவ்வளவு தரமில்லாமல் தற்போது இசை அமைக்கும் பாடல்களையும் கண்மூடித்தனமாக ரசிக்கிறார்களாம். என்னை போன்ற பலரும் அவற்றின் அவர் தகுதிக்கு தரமில்லாத பாடல்களை ரசிப்பதில்லை என்றும் , அவருக்கு சரியான படங்கள் அமைந்தால் அக்குறைகளையும் அவ்வப்போது அவர் நிவர்த்தி செய்யும் போது சந்தோசம் அடைவதையும் இவர் அறிவாரா? இளையராஜா ரசிகர்கள் எவ்வளவு திறந்த மனதுடன் அவரை விமர்சனம் செய்த படி இசை பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள் என்று இணைய தளங்களில் சாதாரணமாக பார்க்கலாமே? வலைப்பூ எழுதும் ஷாஜி இவற்றை எல்லாம் படிக்கிறாரா இல்லையா?
தனது வன்ம வெளிப்பாட்டுக்கு சிகரம் வைத்தாற்போல் பழசிராஜாவின் 'அம்பும் கொம்பும்' பாடல் பாடகி தேர்வு காரணமாக தோல்வியடைந்ததாக குறிப்பிடும் ஷாஜி, அப்பாடல் யார் கவனத்துக்கும் வரவில்லை என்பதிலும் உள்ளூர சந்தோசம் கொள்கிறார்.
பா படத்தின் 'முடி முடி' பாடல் சத்தத்தால் கவனம் கவரும் வீண் முயற்சி என்று சொல்ல அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி உறுத்தவில்லையா? வெற்றி பெற்று (நினைவுகளில் இருந்து மறைந்த !) ரஹ்மானின் பல பாடல்கள் கவித்துவமான பாடல் வரிகளாலா வெற்றி பெற்றன ? கவனம் கவரும் சத்தங்கள் ஆபிரிக்க , அரேபிய குரல் சத்தங்களை வைத்து 'வித்தியாசமாக' இசை அமைத்த ரஹ்மானின் பாடல்கள் மட்டும் இவருக்கு இனிக்கின்றன. 'பா' பாடலில் அவர் கவித்துவ தரம் பார்க்கிறார். 'Slumdog Millionaire' படத்தில் போலிஸ் துரத்த ஓடும் சேரி சிறுவர்களின் மன ஓட்டத்தை புறக்கணித்து 'லபோ திபோ' என்று ஆபிரிக்க தாளம் தெறிக்க ரஹ்மான் கத்தி ஆஸ்கார் வாங்கினால் சந்தோஷப்பட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார். 'அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை ' என்ற தமிழ் பழைய பாடலை நினைவுபடுத்தும் ' ஜெய் ஹோ' இவருக்கு அரிய புதிய (!) பொக்கிஷம். ஆனால் தும்பி வா ஒரு வெளி நாட்டு பாடலின் 'நகல்' என்று இணைய தளங்கள் சொல்வதாக அள்ளி விடுகிறார். இப்பாடலும் youtube இல் கிடைக்கிறது. கேட்டுப்பார்த்தேன். ராஜா இந்த பாட்டை தன வாழ்நாளிலே ஒரு முறை கூட கேட்டிருக்க மாட்டார். அவ்வளவு பொருத்தம் கொண்ட அசல் (!) பாடல் இது.
'ராஜா ' என்று தன்னை தானே 'ராஜா' புகழ்ந்து கொள்வதற்காக விசனம் அடைகிறார் ஷாஜி. (அவர் பேர் ராஜா தானே. பின்னே என்ன மந்திரியா? )பாருங்கள் மொசார்ட் தன்னை 'ராஜா' என்று சொல்லி கொள்வாரா என்று கேட்கிறார். மொசார்டும் விதிவ்சத்தில் 'ராசையா' வாக பிறந்திருந்தால் தனது தலித் அடையாளத்தையும் மீறி , இசை துறையில் தவம் போல் உழைத்து , பல வெற்றிகளை கண்ட பின்பும், ராமராஜனுக்கும் மணிரத்னத்துக்கும் ஒரே நாளில் இசை அமைத்தாலும் அதிலும் variety காட்ட தெரிந்து ' பின்பு 'புகழ் ' கொடுத்த மமதையில் தன்னை 'ராஜா ' என்று சொல்லிக்கொண்டு 'திரிந்திருப்பாரோ' என்னவோ? இதெல்லாம் ஒரு இசை விமர்சகன் செய்யும் வேலையா?

முக்கியமான கட்டம் இது தான். இளையராஜா பாப மார்லி , பாப் டிலான் இருவரையும் 'குப்பை' என்று சொன்னதாக கொதிக்கிறார். இதே 'கருத்தை' நம் அறிவு ஜீவி சாரு தூக்கி 'சொமந்தார்.'. நான் கேட்கிறேன். ராஜா அவர்கள் இருவரையும் 'குப்பை' என்று எந்த பேட்டியில் சொன்னார். அல்லது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ..மேடையில்.. தனது புத்தகங்களில் .. எந்த இடத்தில இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரம் என்ன? இது கண்டிப்பாக தெளிவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இந்த குற்ற சாட்டை சொல்லி பல 'குப்பைகள்' குதித்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் அவர் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்வார் ஷாஜி. கோவிலுக்கு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதை மனதில் வைத்து அவரை 'மனிதம்' இல்லாதவர் என்று கதை கட்டாதீர்கள். ஒரு படத்துக்கு கோடி கணக்கில் வாங்கும் ஹாலிவுட் புகழ் இசை அமைப்பாளர்கள் மட்டும் ஏழை பங்காளர்களா? என்ன மாதிரியான பார்வை இது. இதுவும் உங்கள் இசை புலமையின் வழி வரும் சமூக அக்கறையா?

அவரது ஆன்மீக வாழ்க்கையை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது இசை வெளியீட்டு விழாவுக்கு இருபது பெண்களை நிர்வாணமாக சைக்கிள் ஓட்ட வைத்து 'புரட்சி' செய்யும் வெளிநாட்டு இசை கலைஞனை வானளாவ புகழ தெரிந்த உங்களுக்கு இசை மீதும் இறை மீதும் பக்தி கொண்டு கட்டுக்கோப்பான முறையில் வாழ பழகிக்கொண்ட ராஜா உங்களுக்கு ஜீரணம் ஆக மாட்டார் தான் .

என்னவோ 1992 இல் தான் ராஜா 56 படங்களுக்கு இசை அமைத்ததாக புது கதை விடுகிறார். அவரது 80 களில் பல மொழிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஆண்டு தோறும் இசை அமைத்தார் என்பது.. இசை (கலைஞர்கள் !) கட்டுரையாளரான ஷாஜிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்.

தவிர கஸ்தூரிமான் படத்திற்கான இசை அமைப்பு சமயத்தில் வந்த இரு பெண்களிடம் , அவர்கள் வேறு இசை அமைப்பாளர்கள் இசை பாடியிருந்ததன் காரணமாகவே கடுமையாக நடந்து கொண்டார் என்று எழுதுகிறார். காரணம் தான் அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை அவர் ஒத்துக்கொள்ள மறுப்பவர் என்கிறார் ஷாஜி.
இங்கும் எனக்கு தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இழுக்க வேண்டியிருக்கிறது.. தன முதல் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு 'குமுதம்' நேர்காணலில் தான் சிலரின் (வேறு யார்?) இசையை கேட்பதில்லை என்று சொல்லிவிட்டு தனக்கு பிடித்த இசை அமைப்பாளர்களின் பெயர்களை பட்டியலிடும்போது தமிழ் திரை உலகின் இசை சிகரமான (!) விஜய .T. ராஜேந்தரையும் அதில் சேர்க்கிறார், விடுபட்ட ஒரே பெயர் 'இளையராஜா' .யாரிடம் இசை வாசித்து வந்தாரோ அவர் பெயரை தன ஒரே வெற்றி கொண்டு
புறம் தள்ளிய ரஹ்மானை புகழும் ஷாஜி .. இவ்வளவு வெற்றிக்கு பிறகு ராஜா யாரை மதிக்க வேண்டும் ..ரசிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லி தர தேவை இல்லை. தனது முன்னோர்கள் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

சினிமா போன்ற தொழில் இடங்களில் ஆயிரம் நடக்கும். உங்கள் ஆதர்சம் மறைந்த லோகிதாஸ் , நடிகை ஒருவரை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று யாரவது எழுதினால் நீங்கள் கொதிக்க மாட்டீர்களா? இவற்றை எல்லாம் எழுத உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இன்னொரு முரணாக தன்னை 'ராஜா' என்று தற்பெருமை பேசினார் என்று பிதற்றும் ஷாஜி, கட்டுரையின் இறுதியில் அவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார் என்கிறார். ராஜா என்று சொல்லிகொள்வது மரியாதை குறைவான விஷயமா? எதோ ஒரு ஆத்திரத்தில் ராஜாவை பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று முனைந்திருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது.

கடைசியாக ...
அன்புள்ள ஷாஜி

சாருவை பற்றி நான் எழுதிய கட்டுரையை கண்ணில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்துகொண்டே படித்ததாக சொன்னீர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு. இன்றோ உங்களை பற்றியே ஒருகட்டுரை எழுத வேண்டி எனை தூண்டியது உங்களது வழக்கத்துக்கு மாறான , வன்மம் மட்டுமே நிறைந்த ..இளையர்ஜாவை பற்றிய சமீபத்திய கட்டுரை தான்..வேறெந்த உள்நோக்கமும் அல்ல..

ஏனெனில் நீங்களே என்னிடம் சொன்னது போல் நீங்கள் ஒன்றும் சாரு நிவேதிதா அல்ல..!


ROSAVASANTH said...
பிரமாதம்! நான் எழுத நினைத்த பலதை நீங்கள் எழுதிவிட்டிர்கள். ராஜா பாப் மார்லேயை குப்பை என்று சொன்னதாக சொல்வதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் அவுட்லுக்கில் சிறியவன் ஆனந்த் எழுதிய ஒரு சிறு குறிப்பு. அநத் கட்டுரையே ஒரு திரித்தல் கட்டுரை. அதில் ராஜாவிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பதே தெளிவில்லை. `I am beyond all these garbage' என்று ராஜா சொன்னதாக ஆனந்த் கட்டுரையை முடிக்கிறார். இதுதான் இவர்களின் ஆதாரம். இதில் இருக்கும் முக்கிய விஷயம் ராஜா பாப் மார்லேயை சொல்வதாக நாம் எடுத்துக் கொண்டால், பாவலர் வரதராஜனையும் குப்பை என்று சொன்னார் என்றுதான் அதிலிருந்து நாம் எடுக்க வேண்டும். ஆனால் பாவலர் மீதான ராஜாவின் அபிமானம் எல்லோருக்கும் தெரியும். ஆக ராஜா பாப்மார்லேயை குப்பை என்றார் என்பது திரித்தல், சாரு திரித்தல் செய்து கோயபல்ஸ்தனமாக பரப்பிய திரித்தல். பாப் டைலானை குப்பை என்றார் என்பது இப்போது ஷாஜி முன்வைக்கும் அப்பட்டமான பொய். அதற்கு இந்த முந்தயதை போன்ற அற்பமான அபத்தமான ஆதாரம் கூட கிடையாது. மற்ற திரித்தல்களை நீங்கள் விளக்கியுள்ளீர்கள்.

இதற்கெல்லாம் மௌனத்தையும், கருத்தை திரித்து வேறு கேள்விக்கு பதில் அளிப்பதையும், கருத்து சொன்னவனை கேவலப்படுத்தும் வேலையையுமே சாரு செய்வார். ஷாஜிக்கு எந்த அளவு நேர்மை உண்டு என்பதை இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எதிர்வினைகளை அவர் எதிர்கொள்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

புலிகேசி
said
ஆணந்தின் அந்த காழ்ப்பு நிறைந்த கட்டுரை பற்றி. எந்த வித தரவுகளும் இல்லாமல், மனம் போன போக்கில் ஒரு கட்டுரையை எழுதி விட்டு, பின் அந்த கட்டுரையையே இந்த எச்சில் குடிக்கு அலையும் மனிதரகள் ஆதாரமாக காட்டி, ராஜா பாப் மார்லே, டைலன், கத்தர் (வரதராஜன் பெயரை மிக தெளிவாக தவிர்த்து விட்டு) போன்றோரை குப்பை என்று சொன்னார் என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். ஒரு பொய்யை இப்படி சொல்வதன் மூலம் மெய் ஆக்கி விடலாம் என்பது இவர்களின் கனிப்பு. மெய் அப்படி ஒன்னும் அழிந்து விடாது, ஏதேனும் ரூபத்தில் அது தன்னை புலப்படுத்தும். ஆணந்தின் அந்த கட்டுரை இதோ http://www.outlookindia.com/article.aspx?228024

‘அன்புள்ளம்’ கொண்ட ஷாஜி இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறட்டும். அன்பற்ற ராஜா தனது வரலாற்று கடமையை செய்து கொண்டிருக்கட்டும். 1999′இல் வெளியான பிரேம்‍‍:ரமேஷின் ‘இளையராஜா: இசைமொழியும் தத்துவமும் என்ற புத்தகத்துக்கு செவ்வி அளித்த ராஜா இதே போன்றதொரு கேள்வியாய் புரட்சிகர மற்றும் மக்க்ளுக்கான் இசை படைப்பத்தை பற்றி கேட்க்கபட்ட பொழுது, மிக தெளிவாக மக்களை உறக்கத்தில் இருந்து எழுப்பும் அவ்வகை இசை சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்றும், ஆணால் அந்த இசை அனிச்சையாகவோ, இச்சையாகவோ செய்யாத பட்சட்த்தில் சும்மா இருப்பதே மேல் என்கிறார்.

ஆர்த்தம் புரியாத கபோதிகளுக்கு எனது மொழிபெயர்ப்பு “புரட்ச்சிகர இசை என்பது ஆத்மார்த்தமான அர்பணிப்பு உனர்வோடு செய்ய வேண்டும், சும்மா நானும் புர்ச்சி பன்றேன் சமூகதிற்க்கு சேவை செய்கிறேன் என்னும் இந்த முதலாளித்துவ சமூக சட்ட திட்டகளுக்கு உட்பட்டே ‘பிரே ஃபார் மீ பிரதர்’ என்று சோனி கம்பெனியின் வழிக்காட்டுதலில் புரட்சி செய்யாதே” (த‌விர்க்க‌ முடியாம‌ல் அவ‌ரை ப‌ற்றி இழுத்து விட்டேன், ம‌ன்னிக்க‌வும்).

இப்பொழுது ஷாஜி எழுதி இருக்கும் இந்த கட்டுரையே நாளை சாரு போன்றோருக்கு ஓ.என்.வி.யை பழசிராஜா பாடல்களின் தோல்விக்கு காரணம் என்று கூறினார் ராஜா என எழுதுவதற்க்கு ஆதாரமாகி விடும். தனக்கு நன்றாக தெரியாத ஒரு விஷயத்தை, ஒரு பொது மேடையில் ராஜா எத‌ற்க்கு கூறினார் என‌ விய‌க்கும் ஷாஜி போன்றோருக்கு இல‌வ‌ச‌மாய் sivajitv.com ம‌ற்றும் youtube’இல் கிடைக்கும் ராஜாவின் பேச்சை கேட்க‌ நேர‌ம்தான் இருக்காது.
வாசகர்களுக்கு இங்கு இருக்கு லிங்கு:
Part I www.youtube.com

Part II www.youtube.com

பட‌ங்க‌ளின் பாட‌ல்க‌ளின் தோல்விக்கு கார‌ணம் ஓ.என்.வி என‌ எங்காவ‌து அவ‌ர் சொல்லி இருப்ப‌தை இந்த‌ விடியோக்க‌ளில் க‌ண்டுபிடித்து எவ‌ரேனும் சொல்லி விட்டால், ராஜா ரசிக‌ர்க‌ள் நாங்க‌ள் கூட்டமாக‌ த‌ற்கொலை செய்து கொள்கிறோம். சாருவை போல் இது வெத்து ஜ‌ம்ப‌ம் இல்லை ‘பா’ ப‌ட‌ பாட‌ல்க‌ள் வ‌ட‌ இந்தியாவில் ந‌ல்ல‌ ஹிட் ஆகி விட்ட‌ பின்பும் தொட‌ர்ந்து வெட்கமில்லாமல் எழுதி கொண்டிருக்க‌. அவ‌ருக்கு வெட்கம் எல்லாம் இல்லை என்ப‌து தான் ந‌ம‌க்கு தெரியுமே என‌ கேட்காதீர்கள். பாவ‌ம் அவ‌ர் த‌னது பெட்ரூமில் ‘தென்ற‌ல் வந்து தீன்டும் போது’ பாட‌ முடியாம‌ல் க‌ஷ்ட‌ப‌டுகிறார். ப‌திலாக‌ எமினெமின் ‘BLEED YOU BITCH BLEED’ என பாடுவார், அதனால்தான் அவருக்கு வெடகமில்லாமல் போய் விட்டது. குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மையையாவ‌து நாம் அவ‌ரிட‌ம் எதிர்பார்க்க‌ முடியுமா? அவ‌தார‌த்தின் அந்த பாடல் ஒரு பார்வைய‌ற்ற‌ பென்ணுக்கு வன்ணங்க‌ளை ப‌ற்றி விள‌க்கும் ஒரு முய‌ற்சி, காதல் பாடல் அல்ல, என்பதை அவ‌ர் நேர்மையாய் அல‌சி பார்க்க‌ தயாரா?

யுவ‌னின் ப‌ருத்திவீர‌ன் பாட‌ல்க‌ளை சிலாகித்து ம‌ன்னின் இசை இது, இப்ப‌டி ராஜாவிட‌ம் எதிர்பார்க்க‌ முடியாது என‌ எழுதிய‌ அவ‌ர் யுவ‌னின் ‘ஊரோர‌ம் புளிய‌ ம‌ர‌ம்’ என்ற‌ பாட‌ல் ராஜாவின் புதிய‌ வார்ப்புக‌ள் ப‌ட‌த்தில் வ‌ந்த‌ ‘திருவிழா கூத்து’ எனும் பாட‌லின் அப்பட்ட‌மான‌ பிர‌தி என்பதை ப‌ரிசிலிக்க‌ த‌யாரா? ‘திருவிழா கூத்து’ பாட‌லின் க‌டைசி வ‌ரி எந்த‌ ந‌க‌ர‌த்து/நாகரிக‌ ம‌னித‌னினும் கலாச்சார‌ பொய்மைகளை த‌க‌ர்த்து விடும் ஆற்ற‌ல் கொண்ட‌து என்ப‌தை அவ‌ர் ம‌றுப்பாரா? தெரிந்தே அதை த‌ன‌து இசையில் ப‌டைக்கும் ராஜா, இவர் போன்றோரின் அற்ப புத்திசாலித்த‌னங்க‌ளுக்கும், wikipedia எழுத்துக்க‌ளுக்கும் பிடிப‌ட‌மாட்டார். மெய்யான பின் ந‌வீன‌த்துவ‌ இசை ப‌டைத்து இந்த ச‌மூக‌த்தை முடுக்கி விட்டு கொண்டே இருக்கிறார். அவ‌ர‌து இசை க‌லடைஸ்கோப் போல் ப‌ல்வேறு கோல‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து, இது புரியாத‌ ‘க‌ற்பூர‌’ வாச‌ம் அறியாததுக‌ள்…த‌ங்க‌ள் நிலையில் இருந்து ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற‌ எத்த‌னிக்காத‌ வ‌ரை ஒன்றும் செய்ய‌ முடியாது.

புலிகேசி said...

சாரு மூஞ்சில சேறு! ராஜா, ரஹ்மான், இருவருக்கும் பத்மபூஷன் விருது கிடைத்து இருப்பதால் வடக்கின் அங்கிகாரம் ராஜாவுக்கும் உண்டு என நிருபிக்கபட்டுவிட்டது.
http://pib.nic.in/release/release.asp?relid=57307
இனியாவது எழுதுவதை அந்த அசிங்கம் (உபயம்:ராஜப்ரியன்) நிறுத்துமா என பார்ப்போம். ஆணால் இந்த சந்தில் ஒரு புது காமடி பிட்டை போட்டு விட்டார் சேறு சே... சாரு.
http://charuonline.com/Jan2010/Elayarajacharu.html

///அதில் கொண்டு போய் நாட்டுப்புற இசையைக் கலந்தால் காப்பியில் சாராயத்தைக் கலந்தது போலத்தான் இருக்கும்.///

ஒசியில் குடிக்கும் இவருக்கு எப்படி தெரியும் coffee liqueur என்னும் ஒரு வகையினம் இருப்பது? அல்லது இவர் சுற்றி திரியும் யுரோப்பில் இதை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்த வில்லை போலும்.
http://coffeetea.about.com/cs/alcoholic/a/liqueurs.htm
பாவம் பொழச்சு போகட்டும் பழச்'சாறு'.

///பாப் மார்லியைச் சொன்னது போல் ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிப் பாடகன் கத்தாரையும் மாத்ருபூமி என்ற மலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குப்பை என்று சொல்லியிருக்கிறார். ///

இவ்வளவு நாள் அவுட்லுக் என சொல்லி வந்தார், இப்பொழுது அந்த பேட்டி வெளியானது 'மாத்ருபூமி' என கூறி, அவர் மிகவும் பிரபலமான மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் போலும். சும்மா விட மாட்டோம்டி, வக்காளி அந்த பத்திரிக்கை செய்தி உள்ள லிங்க அல்லது ஸ்கேன் இமேஜ் இனையத்துல பதிவேற்றம் பன்னு, இல்லை மூடிட்டு இரு. கத்தார் கிட்ட போய் சொல்லுமாம் அவரும் இந்த முஞ்ச பார்த்து நம்பிட்டு, துப்பாக்கியோட வந்துடுவாராம். உன்னையத்தான் ரொம்ப நாள பார்க்கனும்ன்னு காத்துகிட்டு இருகாங்க 'நக்ஸல்பாரிகள்' போ போய் பார்த்து சொல்லிட்டு... அப்படியே போய் சேரு.



நன்றி ஷாஜி, சந்திரமோகன், ரோசாவசந்த், புலிகேசி

No comments:

Post a Comment