Monday, May 31, 2010

இளையராஜா மீதான விமர்சனங்கள்.. - ஜெயமோகன்


அன்புள்ள ஜெ,
உயிர்மை இதழில் ஷாஜி இளையராஜாவைப்பற்றி எழுதிய் கட்டுரைக்கு உங்கள் பதிலை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இரண்டுமுறை சேட்டிலே வந்து கேட்டேன் நினைவிருக்கும். நீங்கள்தான் ஷாஜியின் கட்டுரைகளை அறிமுகப்படுத்தினீர்கள். உங்கள் வழியாகவே எனக்கு அவரை தெரியும். நீங்கள் ராஜாவுக்கு ஓரளவு நெருக்கமாக தெரிந்தவர். இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால் நான் கேட்பது அவரது தனிப்பட்ட விஷயங்களைப்பற்றி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பதனால்தான்…நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பது தந்திரமாகவே எனக்கு தோன்றுகிறது மன்னிக்கவும். இந்தக்கட்டுரையைக் கவனித்தீர்கள் அல்லவா?
http://chandanaar.blogspot.com/2010/01/blog-post_22.htmlபோஸ்

அன்புள்ள போஸ்,
எனக்கு எப்படியும் ஒரு முப்பதுநாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். நான் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்வதுபோல உண்மையிலேயே இசையைப்பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதனாலேயே. எல்லா நல்ல பாடல்களையும் ரசிக்கக்கூடியவன் நான்.
மேலும் ஷாஜி என் நெருக்கமான நண்பர். அவரை நான் நன்கறிவேன். உணர்ச்சிகரமானவர். விமரிசனங்களால் அழமாக புண்படுபவர். ஆகவே ஒன்றும் சொல்லவேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் கடிதங்களைப் பார்க்கையில் எது மனதில்பட்ட உண்மையோ அதை சொல்வதே நல்லதென்று பட்டது. நண்பர் என்ற முறையில் அவர் அதை புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரே வழி
நான் அக்கட்டுரை வெளிவந்த சிலநாட்களிலேயே ஷாஜியிடம் என் கருத்தை தெளிவாகவே சொல்லிவிட்டேன். நான் அக்கட்டுரையை நிராகரிப்பது எந்த அபிமானத்தின் அடிப்படையிலும் அல்ல. அதில் பல அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன என்பதனால்தான். அதாவது அது சாரு நிவேதிதாவின் பாணியில், அத்தகைய வாசகர்களை உத்தேசித்து எழுதப்பட்ட கட்டுரை.
முதலாவதாக, ஷாஜியின் கட்டுரைவிமரிசன ஒழுங்கு இல்லாதது. இளையராஜாவின் இசையின் எல்லைகளை அல்லது சரிவுகளைப்பற்றி இதைவிட தீவிரமாகவேகூட எழுதலாம். ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி இசைவிமரிசகனின் எல்லைகளை மீறிச் செல்கிறார். அவரது ஆன்மீகம்,சமூக அக்கறை போன்றவற்றை இசைக்கு அளவுகோலாகக் கொள்கிறார் என்றால் இந்த அளவுகோலை எந்தவிதமாக இவர் அடைந்தார், இதற்கு முன் எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.
இளையராஜாவின் சமூகப்பங்களிப்பு குறித்தெல்லாம் சமூக விமரிசகன் எழுதலாம். உதாரணமாக என் பெருமதிப்புக்குரிய இதழாளரான ஞாநி கடுமையாகவேகூட எழுதியிருக்கிறார். அவர் சமூக விமரிசகராக தொடர்ந்து செயலாற்றுபவர். ஆகவே அவர் கருத்துக்களுக்கு ஒரு தர்க்கபூர்வமான நீட்சி உண்டு. அவரது ஆய்வுக்கருவிகள் நாம் அறிந்தவை. அவர் அனைவர்மேலும் அதை சீராக கையாள்கிறார்.
ஷாஜி இவ்விஷயங்களைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு தமிழ்ச்சமூகச்சூழலைப்பற்றி என்ன தெரியும், அவரது அளவுகோல்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத்தெரியாது. அப்படி சமூகவியல்கோணத்தில் அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தன்னுடைய ஆய்வுகளையும் அணுகுமுறையையும் தெளிவாக முன்வைத்து எழுதவேண்டும். நாம் அவற்றை பரிசீலிக்கலாம். தீர்ப்புகளை மட்டுமே எழுதிசெல்வது சரி அல்ல.
இரண்டாவதாக, ஷாஜி இப்படி ஒரு தனிப்பட்ட மதிப்பீடுகளை தொடுப்பதற்கு உரிய ஆதாரங்களை நேர்மையாக திரட்டிக்கொள்ளவில்லை. அவர் பெரும்பாலும் இதழ்களில் வெளிவந்த ஆதாரமில்லாத கட்டுரைகள் கிசுகிசுக்கள் செய்திகள் போன்றவற்றை நம்பி, அவற்றை உறுதிசெய்துகொள்ளக்கூட முயலாமல், எழுதுகிறார். அவர் அதில் ராஜா குறித்துச் சொன்ன பல விஷயங்கள் பிழையானவை.
ஒருசாதாரண எழுத்தாளனாகிய என்னைப்பற்றி அச்சில், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒருவர் மதிப்பிட ஆரம்பித்தால் தமிழகத்தின் முதல்தர அயோக்கியர்களில், பொறுக்கிகளில் ஒருவன் நான் என எழுதிவிடமுடியும். நான் மறுக்காதவை எல்லாம் உண்மையே என்றும் ஒருவர் வாதிடலாம். ஆனால் எந்த ஒரு அறியப்பட்ட ஆளுமையும் தன்னைப்பற்றி எழுதப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சொன்னால் வேறு வேலையும் நடக்காது.
முன்தீர்மானத்துடனும் மனக்கசப்புடனும்தான் தகவல்களை அணுகினார் ஷாஜி. உதாரணமாக, பழசிராஜா பாடலில் இளையராஜா ஓ.என்.வி குறித்து என்ன சொன்னார் என்று அப்படத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் நானே அவரிடம் விளக்கினேன். ‘ஓஎன்வி அவருக்கு மெட்டு அனுப்பியும்கூட களநடைப்பாடலாக பாடல்வரிகளை எழுதிக்கொடுத்தார், நான் அதை புதிய மெட்டுக்கு மாற்றினேன்’ என்று சொல்லி அதை எனக்குப் பாடியும் காட்டியிருந்தார் ராஜா.
ராஜா அதைத்தான் பின்பு மேடையிலும் சொன்னார். எரிச்சலுடனோ, எதற்கும் விளக்கமாகவோ அல்ல. பொதுவாக பட ‘பிரமோ’க்களில் இதழாளர்கள் செய்திபோட வசதியாக இம்மாதிரி சில துணுக்குகளை கொடுப்பார்கள். அந்த நோக்கில், அந்த மனநிலையில். அதாவது இது ஒருவகை ‘வொர்க்கிங் ஸ்டில்’ மட்டுமே. பழசிராஜா பாடல்கள் ‘வெற்றியா’ என்ற கேள்வியே எழவில்லை.
மலையாள மனோரமாவின் சென்னைநிருபர் செய்தியைத் திரித்தார். அதற்கு ஓர் கேரள அமைச்சர் பதில்சொல்லப்போக அங்கே அலைகளை கிளப்பியது. ராஜா பேசியதன் வீடியோ கிளிப்பிங் வெளிவந்தபோது அலை அடங்கியது. அந்த கிளிப்பிங் யூடியூபில் கிடைக்கிறது. ஆனால் மனோரமாவின் பதிவே ஆதாரம் என்று ஷாஜி உறுதியாகச் சொன்னார். நான் நிறுத்திக்கொண்டேன்.
இளையராஜாவின் குணநலன்களைப் பற்றி ஷாஜி எழுதியதை அவதூறு என்று மட்டுமே சொல்லமுடியும். இத்தனை வருடங்கள் ஒரு பொதுவெளியில் செயல்பட்ட மனிதரைப்பற்றி கசப்புகள் இருக்கும்தான். மேலும் பொதுவாக படைப்பாளிகள் உள்சுருங்கியவர்கள். நிலையான உணர்வுகள் இல்லாதவர்கள். மிகையாக எதிர்வினையாற்றுபவர்கள். இதற்கு எவருமே விதிவிலக்கல்ல.

ஆனால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கனவு தவிர எந்த ஆதாரமும் இல்லாத ஆரம்ப இயக்குநர்கள், இளைஞர்கள் முழுநம்பிக்கையுடன் வெறும் கையுடன் சென்று நிற்கும் வாசலாக இளையராஜாவின் இசையலுவலகம் இருந்திருக்கிறது. அவர்களை ஆதரித்து, சர்வதேசத்தரம் கொண்ட இசையை அளித்து, மனம்சோரும் தருணங்களிலெல்லாம் ஆறுதலும் ஊக்கமும் அளித்து மேடையேற்றிவிட்டவர் ராஜா. அப்படி ஒரு பெரும்பட்டியலே உண்டு. அந்த கனிவும் பண்பும் கொண்ட இன்னொரு முன்னிலை கடந்த அரைநூற்றாண்டு தமிழ் சினிமாவில் இருந்ததில்லை
சந்தேகமிருந்தால் பாலாவிடம் ஷாஜி கேட்டுக்கொள்ளலாம். கண்ணீரில்லாமல் அதைப்பற்றிப் பேச பாலாவால் முடியாது. அப்படி ராஜாவை எண்ணும் குறைந்தது நூறு இயக்குநர்கள் தமிழில் உண்டு. அவர்கள்தான் தமிழின் நல்ல சினிமாவின் தூண்களும்கூட.
மேலும் கலைஞர்களை நல்ல மனிதர்களா, அன்பானவர்களா என்று பார்க்கும் பார்வையும் சரி; அதைவைத்து கலையை மதிப்பிடும் போக்கும் சரி மிக மிக ஆபத்தானவை. ஒரு கலைஞனின் கலையின் அந்தரங்கமான சில தளங்களை புரிந்துகொள்ள அவனது தனிவாழ்க்கை உதவும். புரிந்துகொள்ள மட்டுமே, மதிப்பிட அல்ல. அதற்குமேல் தனிவாழ்க்கையில் நுழைவதென்பது வெறும் வம்பு மட்டுமே.
மூன்றாவதாக, ஷாஜியின் கட்டுரைக்கு தனிப்பட்ட பின்னணி உண்டு. அதை அவர் கட்டுரையில் சொல்லியிருக்கிறார், ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பாடகி கல்யாணி ஷாஜிக்கு குடும்பநண்பர். அவருக்காக ஷாஜி பலவகைகளில் வாய்ப்புகளுக்காக முயல்வதுண்டு. விளம்பரப்பாடல்களில் அவரை பயன்படுத்துவதுண்டு. கஸ்தூரிமான் படம் ஆரம்பிக்கும்போது கல்யாணிக்காக இளையராஜாவின் சொல்லும்படி ஷாஜி லோகியை கட்டாயப்படுத்தினார். லோகி ராஜாவின் கல்யாணியை அறிமுகம் செய்தார்.
அந்த குரல்சோதனையின்போது கல்யாணி வித்யாசாகர் பாடிய பாடலைப் பாடியபோது ராஜா கோபம் கொண்டது உண்மை. ஆனால் கல்யாணி நிராகரிக்கப்பட்டதற்கு அது காரணம் அல்ல. லோகியிடம் நிதானமாகவே அதை ராஜா விளக்கினார். ‘நல்ல குரல், ஆனால் குரலில் புதுமை இல்லை’ என்றார். ‘அப்படியானால் குரல் இனிமையாக இருக்கவேண்டாமா’ என்று லோகி கேட்டதற்கு ‘தேவையே இல்லை’ என்று ராஜா சொன்னதாகவும் அதில் தனக்கு உடன்பாடே இல்லை என்றும் லோகி சொன்னார்.
இந்த நிராகரிப்பில் இருந்துதான் ஷாஜியின் இளையராஜா வெறுப்பு ஆரம்பமாகிறது. கடந்த இருவருடங்களில் அவர் எப்போதுமே ராஜாவை கடுமையாக நிராகரித்து மட்டுமே பேசி வந்தார் என்பதை நண்பர்கள் அறிவார்கள். அதற்கு முன் அப்படியல்ல என்பதையும் நண்பர்கள் அறிவார்கள். இக்கட்டுரையில் ஷாஜி விட்டுவிட்டது அவருக்கு இளையராஜாவை முன்னரே தெரியும் என்பதுதான்.

பலவருடங்களுக்கு முன்னர் சலீல் சௌதுரி •பௌண்டேஷனின் செயலர் என்ற முறையில் சலீல் சௌதுரிக்கு ஒரு விழா எடுத்து அதில் இளையராஜாவை பங்குகொள்ளும்படி அழைத்தார். ராஜாவின் உச்ச நாட்கள் அவை. ராஜா அப்போது ஷாஜி யாரென்றே அறியாதவர். விழா மிகச்சிறிது. ஆனால் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு அவரே வந்தார், சலீல் சௌதுரி மீது இருந்த மதிப்பு காரணமாக மட்டும்.
சலீல் சௌதுரிக்கு வந்திருக்கும் அந்த மிகக் குறைவான கூட்டத்தைப்பற்றி மேடையில் மனக்குறைப்பட்டு பேசிய ராஜா சலீல் சௌதுரியின் இசையின் பல நுட்பங்களை தொட்டுக்காட்டி பேசினார். இசையின் ‘அரேஞ்ச்மெண்ட்’ குறித்து அவர் அன்று பேசியது மிக முக்கியமானது என்று ஷாஜி பலமுறை சொல்லியிருக்கிறார்.
சலீல் சௌதுரியின் பல பாடல்கள் மீது திருட்டுக்குற்றச்சாட்டு உண்டு. அதற்கு விளக்கமளித்து பேசிய ராஜா இசை என்பது எல்லைக்குட்பட்ட ஸ்வரங்களால் ஆனது என்னும்போது சாயல்கள் ஏற்படும். சிலசமயம் பிறிதொரு இசை மனத்தூண்டலாக அமையலாம். ஆனால் அந்த தொடக்கத்தில் இருந்து எப்படியெல்லாம் மேலே செல்லமுடிந்திருக்கிறது என்பதையே அளவாகக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் ஷாஜி சொல்லி நான் அறிந்ததே. இச்செய்தியை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஷாஜி சொல்லியிருக்கிறார்.
கடைசியாக, ஷாஜிக்கு இளையராஜாவின் இசையில் மையமான சில விஷயங்களை மதிப்பிடும் ஆற்றல் இல்லை. காரணம் அவருக்கும் கர்நாடக சங்கீதமோ, ராகங்களோ தெரியாது. மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணமும் தெரியாது. ராஜா அவரது முக்கியமான சோதனைகளையும் சாதனைகளையும் அந்த தளங்களில்தான் நிகழ்த்தியிருக்கிறார்.
அவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக தெரியாமல் விமரிசிக்கக் கூடாதா என்றால் செய்யலாம் என்றே சொல்வேன். காரணம் சினிமாப்பாடல்கள் பொதுரசிகனுக்குரியவை. ஆனால் அந்த எல்லையை புரிந்துகொண்டு அதற்குள் தன்னை நிறுத்திக்கொண்டு செய்யவேண்டும். நான் எதிர்மறை விமரிசனத்தில் எனக்கு தெரியாத இடங்களைச் சுட்டிக்காட்டியபின்னரே பேச ஆரம்பிப்பேன்.
இளையராஜா இசையில் என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் ஷாஜி அவரது ‘வெற்றி’களை கொண்டே அவரை மதிப்பிடுகிறார். மேலைநாட்டு பரப்பிசையைப் பற்றிப் பேசும்போது அவர் எப்போதுமே வணிக வெற்றியையே அளவுகோலாகக் கொள்கிறார். அப்பாடல்களின் நயம் குறித்து ஏதும் சொல்வதில்லை. அப்படியானால் வெகுஜன வெற்றிதான் இசையை அளக்க அளவுகோலா என்றால் அவர் மதன்மோகன் போன்ற ‘தோல்வி’ அடைந்த இசைமேதைகளைப்பற்றிச் சொன்னது இடையூறாக இருக்கிறது.
வணிக வெற்றியை அளவுகோலாகக் கொண்டால் ராஜா தொண்ணூறுகள் வரை முப்பது வருடம் ஈடிணையில்லாத புகழுடன்தான் இருந்தார். ஷாஜி அவர் முதல் பத்து வருடங்களுடன் தீர்ந்துவிட்டார் என்கிறார். இசையின் தரம் அல்லது நுட்பத்தை வைத்து அளவிடுகிறார் என்றால் அதற்கான அவரது அளவுகோல்கள் சொல்லப்பட்டாக வேண்டும். அதைச் சொல்ல அவரது தகுதி வெளிப்பட்டாக வேண்டும்.
ஆக, வெறுமே ஒரு மனக்கசப்பில் இருந்து ஆரம்பித்து வம்புகளைக்கொண்டு நிரப்பி ஷாஜி தன் கட்டுரையை எழுதியிருக்கிறார். நானறிந்த ஷாஜி சிறந்த நகைச்சுவை உணர்ச்சியும், ஆழமான நல்லியல்புகளும், நுட்பமான ரசனையும் கொண்ட நல்ல நண்பர். இந்தக் கசப்பு அவரது சமநிலையை இல்லாமல் செய்துவிட்டது. அதை அவர் உணர்ந்தாரென்றால் இந்த மனநிலையைப் பற்றி கவனமாக இருக்க முடியும். அது அவரது நம்பகத்தன்மைக்கு நல்லது.
மாறாக, எவரை வசைபாடினாலும் உடனே வந்து ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தின் கைத்தட்டலையோ அல்லது வம்புகளை எழுதிவாங்குவதில் குறியாக இருக்கும் இதழாசிரியரின் தூண்டுதலையே ஆதாரமாகக் கொள்வாரென்றால் அது அவரை இன்னொரு சாரு நிவேதிதாவாகவே ஆக்கும். அதை ஷாஜி எந்த அளவுக்கு வெறுப்பார் என்பதை அவர் அறிவார்.
ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம், எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். அம்மாதிரி சமநிலை இல்லாமல் நானும் பலவற்றை ஆரம்பகாலத்தில் எழுதி பின்னர் வருத்தப்பட்டிருக்கிறேன். இதை நான் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பராகிய ஷாஜியிடம் வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கிறேன்.
*


சிலமாதங்கள் முன்பு நானும் ஷாஜியும் தனிப்பட்டமுறையில் ராஜாபற்றி பேசினோம். அப்போது இக்கட்டுரையில் உள்ள ‘ராஜா ஒன்றுமே செய்யவில்லை’ என்ற வரியை ஷாஜி வேறுவகையில் சொன்னார். ராஜா அவர் சொன்ன எதுவும் நடக்கும் என்ற நிலை இருந்தபோது தமிழ்சினிமாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்றார் ஷாஜி.
நான் அதை திட்டவட்டமாக ஆதாரங்களுடன் மறுத்தேன். ஷாஜிக்கு தமிழ்சினிமா வரலாறே தெரியவில்லை என்றேன். அதன் பின் அவர் தன் கட்டுரையில் அந்த குற்றச்சாட்டு இல்லாமல் எழுதியிருக்கிறார். மாறாக ‘ சமூகத்துக்கு’ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். செய்தாரா என ராஜா விளம்பரப்படுத்த வேண்டுமா என்ன?
தமிழின் நல்ல சினிமாவுக்காக இளையராஜா அளவுக்குப் பங்காற்றிய இன்னொரு ஆளுமையே கிடையாது. இன்னும்கூட பதிவுபெறாத ஒரு மகத்தான பக்கம் அது. 1976ல் ராஜா திரையுலகுக்கு வந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி யுகம் முடிந்து எழுபதுகளில் உருவான யதார்த்தவாத அலைக்குக் காரணமாக அமைந்ததே ராஜாவின் வருகைதான். இன்றுவரை தமிழ்சினிமாவின் பொற்காலமாக திகழ்வது அதுவே. இப்போதுவரும் யதார்த்தவாதபடங்களின் இலக்கணம் அமைந்ததும் அப்போதே.
அந்த அலையின் ஒரு பகுதியாக இளையராஜா திகழவில்லை. மாறாக அவர்தான் அந்த அலையை வழிநடத்திய சக்தி. பாரதிராஜா படவுலகில் நுழைய முனைந்தபோது எஸ்.ஏ.ராஜ்கண்ணு போட்ட ஒரேநிபந்தனை இளையராஜா இசையமைப்பாரா என்பதே. அந்த உறுதியை வாங்கியபிறகே பாரதிராஜாவால் படம் தொடங்க முடிந்தது.
நட்சத்திரங்கள் இல்லாமல், நாடகத்தன்மை இல்லாமல், மிகச்சிறிய யதார்த்தப் படங்கள் வணிகவெற்றி பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியது இளையராஜாவின் துடிப்பான இசைதான். புதியவர்களின் சிறு முதலீட்டுப் படங்கள் வென்றால்தான் திரைக்கலையில் மாற்றம் வரும். இளையராஜா அக்காலத்தில் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு துணிந்து இசையமைத்தார். மிகத்தரமாக. அதற்கு மிகமிகக் குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டார். அவரது பங்களிப்பு இல்லாமல் அந்தப் படங்கள் உருவாகியிருக்க முடியாது, வெற்றி பெற்றிருக்கவும் முடியாது என்பது வரலாறு. அவையே தமிழ்சினிமாவை மாற்றியமைத்தன.
மலையாள சினிமாவும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் யதார்த்தவாதம் நோக்கி வந்தது. பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் உள்ளே வந்தார்கள். புதுநடிகர்கள் அறிமுகமானார்கள். ஆனால் மலையாள சினிமா அந்த மாற்றத்தைக் கொண்டுவர பாலுணர்ச்சியை நம்பியிருந்தது. துணிச்சலான செக்ஸ்படங்கள் வழியாகவே மலையாள சினிமாவில் சிறு படங்கள் வென்றன. மலையாளசினிமா உலகம் அதன்வழியாகவே தன் அமைப்பு, சூழல் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டது. அதாவது அங்கே செக்ஸ் செய்ததை இங்கே ராஜா செய்தார்.
பாரதிராஜா, தேவராஜ் மோகன், மகேந்திரன், துரை, ருத்ரையா,பாக்யராஜ் என ஆரம்பித்து மணிரத்தினம், பாலா வரை தமிழில் தீவிரமான இலக்குகளோடு நுழைந்த அத்தனை இயக்குநர்களும் ராஜாவிடம்தான் முதலில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவரால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஐ.வி.சசி, பரதன்,பாசில் முதலிய தரமான மலையாள இயக்குநர்கள் தமிழுக்கு வந்தபோது அவர்களின் வருகையை மிகச்சிறந்த இசையால் கௌரவித்திருக்கிறார் ராஜா.
ஓர் இளம் இயக்குநருக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மிகச்சிறந்த இசையை அளிப்பதென்ற ராஜாவின் கொள்கையை தொடர்ச்சியாக முப்பது வருடம் தமிழில் நாம் காணமுடிகிறது. ராஜாவின் மகத்தான பாடல்கள் பல புது இயக்குநர்களின் படங்களில் அமைந்தவை என்பதை பலர் நினைப்பதில்லை. தமிழில் புதிய விஷயங்கள் வருவதற்கு அமைப்புக்கு உள்ளே இருந்து வரும் ஒரே ஆதரவுக்கரம் இளையராஜாவுடையதாகவே இருந்திருக்கிறது என்பது வரலாறு.
பலசமயம் அந்த முதல்படங்கள் காணாமல் போயிருக்கின்றன, இசையால் மட்டுமே அறியப்படுகின்றன. சிலசமயம் நல்ல படங்கள்கூட. சிறந்த உதாரணம், சின்னத்தாயி. திருநெல்வேலியின் ஆத்மா பதிவான ஒரு நல்ல படம் அது. மிகமிகக் குறைவான செலவில் எடுக்கப்பட்டது. அனேகமாக ராஜாவுக்கு சில ஆயிரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம், அதைக்கூட முழுமையாகக் கொடுத்தார்களா என்பது ஐயத்திற்குரியது. அற்புதமான இசையால், நெல்லை நாட்டுப்புறத்தன்மை அதற்கே உரிய வாத்தியங்களுடன் வெளிப்பட்ட பாடல்களால் அந்தப்படம் அழுத்தம் பெற்றிருந்தது. துரதிருஷ்டவசமாக அது வெற்றி பெறவில்லை. அதன் இயக்குநர் இளமையில் இறந்தும் விட்டார் என்றார்கள். அப்படி எத்தனை படங்கள்.
சிந்தித்துப் பார்த்தால் இது எவ்வளவு பெரிய ஓர் வாய்ப்பு என்பது தெரியும். இன்று நல்ல படம் எடுக்க முனையும் இயக்குநர்களுக்கு இருக்கும் சிக்கலே இசைதான். தரமான இசை தேவை என்றால் அது படத்துக்கான செலவில் மூன்றில் ஒருபங்கை சாப்பிடும். செலவைக்குறைத்தால் இசை வெளிறிக் கிடக்கும். சமீபகாலத்தில் வெற்றிபெற்ற சின்னப்படங்களின் இசையைக் கவனித்தால் இது தெரியும்.
ராஜா அவரது இசையை அது மிகமிக விரும்பப்பட்ட நாட்களில்கூட வியாபாரப் பொருள் ஆக்கவில்லை. அதனால் அவர் கோடிகளை இழந்திருக்கக் கூடும். ஆனால் தரமான ஒரு திரை இயக்கத்தின் பகுதியாக தன் இசை இருக்கவேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தார். வேறெந்த திரைச் சாதனையாளரும் ராஜா அளவுக்கு நல்ல சினிமா மீது இத்தனை பற்றுடன் இருந்ததில்லை.

கடைசியாக ஒன்று.பாலுமகேந்திரா தனிப்பேச்சில் சொன்னது இது. ராஜா தமிழில் அறிமுகமானபோது தமிழ்சினிமாவின் திரைமொழி மிகப்பழமையாக இருந்தது. காரணம் அது அனைவருக்கும் புரிந்தாகவேண்டும் என்ற கட்டாயம். திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் அடுத்த காட்சிக்கான குறிப்பு இருக்கும். ‘எங்கே அந்த சண்முகம், வாங்க போய் பாப்போம்’ என்பது போன்ற வசனங்கள். அல்லது காட்சி அடையாளங்கள். ஏன், பாடலிலேயே அடுத்த காட்சிக்கான தொடக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இல்லாவிட்டால் தொடர்ச்சியை அன்றைய ரசிகன் உணர முடியாது.
அதேபோல காட்சி மாறும்போது ‘ர்ரீங்’ என்பது போல ஒரு சத்தம் இருக்கும். கதை பின்னுக்கு நகர்ந்தால் அது தெளிவாகவே காட்டப்படும். ஆரம்பத்தில் கொசுவத்திச் சுருள். பிற்காலத்தில் பிம்பம் மீது பிம்பம் ஏறுவது, அணைந்து மீள்வது போன்ற காட்சிகள். கதாபாத்திரம் ஓர் அறைவிட்டு இன்னொரு அறைக்குப் போகவேண்டுமென்றால்கூட அதைக் காட்டியாக வேண்டும். ஒரு கதாபாத்திரம் நல்லவிஷயம் சொல்லப்போகிறதா கெட்ட விஷயம் சொல்லப்போகிறதா என்பதை தனித்தனி அண்மைக்காட்சிகள் மூலம் காட்ட வேண்டும். வசனத்தில்கூடச் சொல்ல வேண்டும். கதாபாத்திர மனநிலைகளை தெளிவாக வசனம் மூலம் காட்டியாகவேண்டும்.
ஏன், நடிப்புக்கே இந்தச் சிக்கல்கள் இருந்தன. அக்கால நடிப்பு ஏன் செயற்கையாக இருந்தது என்றால் திரையில் உணர்ச்சிகள் தெளிவாக புரியவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது என்பதனால்தான். திடுக்கிடுவது, அதிர்ச்சி அடைவது, துயரப்படுவது எல்லாவற்றையும் முகத்தசைகள் உடலசைவுகள் மூலம் காட்டியே ஆகவேண்டியிருந்தது. தமிழ் ரசிகனின் எல்லை அது.
இந்த எல்லையைப் புரிந்துகொண்டு, நவீன சினிமாவின் சாத்தியங்களையும் தெரிந்துகொண்டு பின்னணி இசையமைக்க இளையராஜா முன்வந்த ஒரே காரணத்தால்தான் தமிழ் சினிமாவின் காட்சிமொழியை துணிந்து மாற்ற முடிந்தது. இளையராஜா எழுபதுகளின் கன்னடநவசினிமா அலையில் இருந்து நவீனக் காட்சிமொழியின் சாத்தியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்ளே வந்தவர் என்பதே அதற்குக் காரணம்.
ராஜாவின் பின்னணி இசையை இந்த வரலாற்றுச்சூழலை புரிந்துகொள்ளாமல் எவரும் மதிப்பிட்டுவிடமுடியாது. ராஜாவுக்கு முன்னால் பின்னணி இசையில் இசையமைப்பாளர்கள் கவனம் செலுத்தியதில்லை. அவற்றை அனேகமாக அவர்களின் உதவியாளர்களே அமைபப்பாகள். அவை ‘இ•பக்ட்’ என்ற அளவிலேயே இருக்கும். கதையைப்புரிந்துகொண்டு தொடர்ச்சியான இசை அமைக்கப்படுவதில்லை. மாறாக தனிக்காட்சிகளுக்கே இசை அமைக்கப்படும்.
ராஜா முழுப்படத்துக்கும் மொத்தமாக இசையமைத்தார். படத்துக்கு அதன் சாரம்புரிந்து தீம் இசையை உருவாக்கினார். உதாரணமாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு குடும்பத்தின் கதைதான். ராஜா தன் தீம் இசை மூலம் அதை அக்குழந்தைகளின் கதையாக அழுத்தம் கொடுப்பதைக் காணலாம். உதிரிப்பூக்கள் தொடர்ச்சியே இல்லாத தனிச்சம்பவங்களால் ஆன படம். பின்னணி இசையே அதை கோர்வையாக கொண்டுசெல்கிறது.
படத்துக்கு ராஜா இசைமூலம் தொடர்ச்சியை உருவாக்கினார். அழுத்திக் காட்டவேண்டியதை அழுத்திக்காட்டினார். உணர்ச்சிகளை திட்டவட்டமாக அடையாளப்படுத்தினார். கதாபாத்திரங்களுக்குக் கூட தனியான இசை அடையாளங்களை உருவாக்கினார். பல படங்களில் இயக்குநர் சொல்ல வருவதைக்கூட இசை விளக்கியது. ‘நிறம் மாறாத பூக்களில்’ கதை முன்னும்பின்னும் நகர்வதை இசைதான் காட்டியது
இந்த வசதியைக் கொண்டுதான் இயக்குநர்கள் திரைமொழியை மாற்றியமைத்தார்கள். மிதமான நடிப்பு போதும் என்ற நிலை வந்தது. செயற்கையான காட்சிமாற்றமும் ‘க்ளூ’ கொடுக்கும் வசனமும் தேவையில்லை என்றாகியது. தன்னுடைய ‘மூடுபனி’ படத்தில் சாதாரணமான ஆரம்பக் காட்சியிலேயே அதை ‘சைக்கோ திரில்லர்’ என ராஜா காட்டிவிட்டார் என்றார் பாலு. இல்லாவிட்டால் அதற்கு நான்கு காட்சிகளை ‘சமைக்க’ வேண்டியிருந்திருக்கும் என்றார்.
ஒரு கலைவடிவம் என்பது அது உருவான சமூக,பண்பாட்டுச்சூழலை ஒட்டி அதன் இடைவெளிகளை நிரப்பியபடி வளர்வது. உலகமெங்கும் முதிர்ச்சி உள்ள விமரிசகர்கள் கலையை அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கலையின் நுட்பங்களையும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தையும் கூர்ந்து அவதானிக்கும் விரிவான ஆய்வுமனநிலை தேவை. இங்கே பொத்தாம் பொதுவாக ‘அமெரிக்காவிலே வேறமாதிரி தெரியுமா?’ என்றவகை எழுத்துக்களே விமரிசனமாக முன்வைக்கப்படுகின்றன. எல்லா தளத்திலும். நம் துரதிருஷ்டம் இது.
அதிலும் குறிப்பாக வெகுஜனக்கலை என்பது அது எதிர்கொள்ளும் சமூகத்துடனான உரையாடல் வழியாகவே உருவாகக்கூடியது. அச்சமூகத்தின் போதாமைகள நிரப்பிக்கொண்டு உச்சங்களை உள்வாங்கிக்கொண்டு அது முன்னகரும். எந்த இடத்தில் அது கலைஞனின் வெளிப்பாடு எந்த இடத்தில் சமூகத்தின் விழைவின் வெளிப்பாடு என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. அண்டோனியோ கிராம்ஷி முதல் டில்யூஸ் கத்தாரி வரை பற்பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் இது. அக்கப்போர் தளத்தில் இதை அணுகும் பார்வைகள் அபத்தமான விளைவுகளையே உருவாக்குகின்றன.
படத்துக்குப் படம் ராஜா மாறிக்கொள்வதைப் பார்க்கும் எவரும் அவர் எந்த அளவுக்கு இயக்குநருக்கு தன்னை அளிக்கிறார் என்ற வியப்பை அடைவார்கள். ‘புதியவார்ப்பு’களில் உள்ள இசைக்கும் ‘அவள் அப்படித்தா’னில் உள்ள இசைக்கும் உள்ள வேறுபாடுகளையே பார்த்தால் போதும். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட படங்கள். புதியவார்ப்புகளில் பின்னணி இசை பாடிக்கொண்டே இருக்கிறது. அவள் அபப்டித்தானில் அது வெறுமே முனகுகிறது.
திரைமொழி வளர்ந்தபோது காலப்போக்கில் இளையராஜா இசையில் காட்சிகளுக்கு பரஸ்பரத் தொடர்பு கொடுப்பது விளக்குவது போன்றவற்றில் இருந்து முன்னகர்ந்து மேலும் நுட்பமான பல விஷயங்களைச் செய்திருக்கிறார். என்னைப்போன்ற எளிய ரசிகனே உணரும் நுட்பங்கள். பல படங்களில் பின்னணி இசை ஒரு ஆழ்ந்த வேறு பொருளையும் காட்சிக்கு சேர்ப்பதைக் காணலாம்.
இன்றைய யதார்த்த தமிழ் சினிமாவுக்கு ராஜாவின் பங்களிப்பு என்ன என்பதைப்பற்றி இன்றுவரை விஷயமறிந்த எவரும் எழுதியதில்லை. தகவலறிவுடன், சமநிலையுடன் எழுத நம்மிடம் ஆட்கள் இல்லை. தெரிந்தவர்கள் எழுதுவதும் இல்லை. ஆகவேதான் என்ன ஏது என்றறியாமல் எழுதும் எழுத்துக்களையும், அசட்டு பீற்றல்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
இளையராஜாவின் இசையின் இன்னொரு பக்கம் என்பது அவர் கர்நாடக இசையின் அமைப்பில் செய்த சோதனைகள். அவற்றை அத்துறை சார்ந்தவர்களே சொல்லமுடியும். பத்து வருடம்முன்பு ‘சொல்புதிது’ இதழுக்காக தமிழிசை அறிஞர் நா.மம்முதுவை நான் பேட்டி எடுத்தேன். அப்போது அபூர்வமான ராகங்களுக்கான, ராகங்களை பயன்படுத்துவதில் உள்ள அழகியல்சாத்தியங்களுக்கான நுட்பமான உதாரணமாக அவர் சுட்டிக்காட்டிய எல்லா பாடல்களும் இளையராஜாவின் சினிமாப்பாடல்கள். இளையராஜா தேங்கி அழிந்துவிட்டார் என்று ஷாஜி ‘அறிவித்த’ பிற்காலப் பத்து வருடங்களைச் சேர்ந்த பாடல்கள் அவை. அந்தப்பேட்டி என் ‘இலக்கிய உரையாடல்கள்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]
அதன்பின் நான் முக்கியமான பல மரபிசை நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். ராஜாவின் மிகச்சிறந்த,நுட்பமான இசைப்பின்னல்களுடன் சோதனைநோக்குடன் அமைந்த, படைப்புகள் என அவர்கள் சொன்னபல பாடல்கள் அவர் பிற்காலத்தில் அமைத்தவை. அவர்கள் சொன்ன பல விஷயங்கள் எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் அந்தப்பாடல்கள் வெகுஜன அளவில் பெரிதும் ரசிக்கப்பட்டவை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
உதாரணமாக திருவாரூரைச் சேர்ந்த ஒரு வயதான நாதஸ்வரக் கலைஞர் ஒரு ராகத்தின் அழகை காட்டும் பாடலாக ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாட்டை சுட்டிக்காட்டினார். தாளம் மூலம் அந்த ராகத்தின் காலக்கட்டுமானத்தை எப்படியெல்லாம் மாற்றலாம், ஆலாபனையை எப்படி விசித்திரமாக உடைத்து செய்யலாம் என்பதற்கான அற்புதமான உதாரணமாக அதை அவர் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருந்தார்.
இளையராஜாவின் இந்த தளத்தில் உள்ள சாதனைகளை இந்த தளத்தில் பயிற்சியும் ரசனையும் உடையவர்களே சொல்லமுடியும். மற்றவர்கள் கருத்துச் சொல்லும்போது தங்களுடைய எல்லைகளை உணர்ந்து அதற்குள் நின்று பேசுவதே கௌரவமான விஷயமாகும். வெறும் வம்புதான் நோக்கம் என எண்ணுபவர்களுக்கு எதையும் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் இசைவிமரிசகனுக்கு அவன் பேசுதளம் சார்ந்த புரிதல் இருக்க வேண்டும்.
அனைத்துக்கும் அப்பால் மேதைகளைப் பற்றிப் பேசும்போது நம் எளிய தீர்ப்புகளை அவர்கள் மேல் போடக்கூடாது என்ற அடக்கம் எந்த விமரிசகனுக்கும் தேவை. சாதாரணர்களின் விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல மேதைகள். உதாரணமாக நா.மம்முது இளையராஜாவின் அதிநுட்பமான பாடல்கள் என்று சுட்டிக்காட்டிய பாடல்களை போட்ட காலத்தில் அவர் வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு இரண்டுபாடல்களைக்கூட போட்டிருந்தார். இதை புரிந்துகொள்வதுதான் விமரிசகனின் வேலையே ஒழிய கலைஞனுக்கு ஆலோசனை சொல்வதல்ல.
தன்வாழ்நாளில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு குட்டி நூலகம் அளவுக்கு! டாக்டர் சிவராம காரந்த் எழுதிய மொத்த பக்கங்கள் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம்! அவற்றில் இரு முழு கலைக்களஞ்சியத்தொகுதிகளும் அடக்கம். இத்தனையும் எழுதிவிட்டு அவர் யட்சகான நடனமும் கற்றுக்கொண்டு மேடையில் ஆடினார். சிற்பக்கலை குறித்து புகைப்பட நூல்களை வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்காக கிட்டத்தட்ட நூறு வழக்குகளை நடத்தினார். மிச்ச நேரத்தில் இந்திய சட்டநூல்களை கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். விதிகளை யார் சொல்வது, விமரிசகனா?
வாழ்நாள் முழுக்க பிற எழுத்துக்களை வாசித்த இலக்கிய மேதைகள் உண்டு. தன் சொந்த எழுத்துக்களை அல்லாமல் எதையுமே வாசிக்காத மேதைகளும் உண்டு. வாழ்நாள் முழுக்க அலைந்து திரிந்து அனுபவங்களில் திளைத்த மேதைகள் உண்டு, அறையை விட்டு வெளியே செல்லாதவர்களும் உண்டு. ‘நான் பயணங்களை அறவே வெறுக்கிறேன்’ என்றார் போர்ஹெஸ். வாழ்நாள் முழுக்க பயணங்களை பற்றி எழுதிக்கொண்டுமிருந்தார்.இலக்கியத்தில் என்றல்ல, எந்த துறையிலும் இம்மாதிரி எளிமைப்படுத்தல்களுக்கு இடமில்லை. கலையின் பித்தெடுத்த இயக்க விதிகளை அறிந்த ஒருவன் கலைஞன் எப்படி இயங்கியிருக்க வேண்டும் என சொல்ல துணிவானா? எங்கோ ஒரு இடத்தில் அவனது அகம் கூச வேண்டாமா?
கடைசியாக மீண்டும், இளையராஜாவை மிகக் கடுமையாக கறாராக விமரிசனம் செய்யும் தரமான கட்டுரைகள் இன்னமும் தமிழில் வரவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம் பற்றி எனக்கே கடுமையான விமரிசனம் உண்டு. ஆனால் அந்த விமரிசனங்கள் தங்கள் எல்லையை உணர்ந்த விமரிசகர்களால் சமநிலையுடன் செய்யப்படாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை.

நன்றி: jeyamohan.in

Sunday, May 23, 2010

எப்பவும் நான் ராஜா!!


விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!

ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.

அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!

ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.

இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.

சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.

அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்

நன்றி:ஜீவா, ஜீவா ஓவியக்கூடம

Sunday, May 16, 2010

நான் பார்த்த இளையராஜா - அகிலன் (அகி மியூஸிக்)



இசை துறையில் ப‌ல‌கால‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள், இசை ஆர்வ‌லர்க‌ள், இளைய‌ராஜாவின் இசை பிரிய‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகைச் செய்தி விய‌ப்பையும் ம‌கிழ்வையும் அளித்திருக்கும். ந‌ம‌து நாட்டின் 'அகி மியூசிக்' இசை நிறுவ‌ன‌த்திற்கு த‌ன‌து எல்லா இசை உரிம‌த்தையும் இசைஞானி இளைய‌ராஜா வ‌ழ‌ங்கியிருந்தார்.

ந‌ண்ப‌ர் அகில‌ன் அடைந்திருக்கும் ம‌க‌த்தான‌ வெற்றி இது. பொதுவாக‌ வெற்றிக‌ளுக்குப் பின்னே வ‌லி மிகுந்த‌ க‌தைக‌ள் இருக்கும். ஐந்து வ‌ருட‌ ந‌ட்பில் அகில‌னை ஓர‌ள‌வு அறிவேன். மிகுந்த‌ கூச்ச‌ சுபாவ‌ம் உடைய‌வ‌ர். அகி மியூசிக்கின் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி எழுத‌ ப‌ணித்தேன். மிக‌வும் த‌ய‌ங்கினார். அது சுய‌புராண‌ம் ஆகிவிடுமோ என‌ ம‌றுத்தார். நெடிய‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பின்ன‌ர் எழுதி கொடுத்தார். ச‌ம‌கால‌த்தில் நாம் காணும் ஒரு வெற்றி அத‌ன் பிசு பிசுப்பு மாறாம‌ல் ஒலிக்கிற‌து. - மா. நவீன்

அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது. ஒரு தமிழனுக்கு இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை நான் விளக்கினால் அது இந்தக் கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டுப் போக நேரும். அதனால் அதை தவிர்க்கிறேன்.

90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.

அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன். இசை எனது பயணம் என்று என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. ஆனால் எந்த இசை திறனும் என்னிடம் இல்லை. பியானோ சில மாதங்களும், கர்நாடக வாய்பாட்டு சில மாதங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தேன். எனக்கு எப்பொழுதும் பொறுமையிருந்ததில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட, என்னை எழுத துன்புறுத்திக் கொண்டிருக்கும் நண்பர் நவீனின் முகம் வந்து வந்து போகிறது. இல்லையென்றால், இந்த அளவு பொறுமையும் வராது. அதனால் இசையைப் படிப்பது எனக்கு அலுப்பாக இருந்தது.

பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா அவர்களைப் பற்றி திரு. வீ. செல்வராஜ் எழுதிய ஞானவித்து என்ற கட்டுரை, இசை சார்ந்த தேடல்களில் என்னை மும்முரப்படுத்தியது. அந்தக் கட்டுரைதான் ஒருவகையில் இளையராஜாவின் இசையை நான் தேடிப்போகக் காரணமாக இருந்தாலும், இளையராஜாவின் பேட்டிகள் எல்லா வகையான இசைகளையும் நான் தேடி செல்ல, ரசிக்க என்னை உந்தியது. ஒரு பேட்டியில் அவர், 'இசைஞானிகள் என்று இன்று எவரும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் போன்றவர்களோடு முடிந்து விட்டது. நாம் எல்லோரும் அவர்கள் இட்ட பிச்சையில்தான் வாழ்கிறோம்' என்றார். அது எனது அடுத்தக் கட்டத்திற்கு வழிவகுத்தது. சினிமா இசையிலிருந்து எனது செவிகளை அகற்றி எனது இசைத் தரிசனத்தை விசாலமாக்க உதவியது அவருடைய அந்தப் பேட்டி. இசைஞானி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், தியாகராஜரையும் முத்து சுவாமி தீட்சதரையும் ஞானி என்கிறாரே, யார் அவர்கள் என்றும் என்ன பாடல் இசையமைத்தார்கள் என்றும் தேடிப்போய், கர்நாடக இசையை விரும்ப ஆரம்பித்தேன். மற்றொரு பேட்டியில் பாக்கையும் (Bach) மோசாட் (Mozart) பற்றியும், அவர் குறிப்பிட்டதைப்பற்றிப் படித்து சில காலங்கள் மேலைநாட்டு சாஸ்தீரிய சங்கீதத்தில் ஆழ்ந்துப்போனேன்.

சட்டென்று நிகழவில்லை எதுவும். முதன் முதலில் கேட்டபோது, அது கர்நாடகமோ, மேலை சங்கீதமோ, கேட்ட சில நிமிடங்களில் உறங்கிவிடுவேன். மிகப்பெரிய இழுவையாகவும் அறுவையாகவும், அலுப்புத் தட்டுவதுமாகவே இருந்தது. இளையராஜாவின் இசைக்கு உருகிப் போயிருக்கிறோம் ஆனால் அவரோ வேறொரு இசையை போற்றுகிறாரே, அப்படி என்ன மேன்மைகள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். பின்னாளில் எல்லா இசைக்கும் எனது செவியும் மனமும் இம்மூன் (immune) ஆகிவிட்டது.

பிறகு எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Warner Music) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.


இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.

இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C Low). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.

வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.

2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.


'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.

இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.

ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.

நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.

இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.

அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

ooo

மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.

அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.

இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.

பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.

ooo

இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.

2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.

சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.

இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Capitalism) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மரணப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.

ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.

இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.

இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்பு.

நன்றி: அகிலன் & ஜீவா ஓவியக்கூடம்

தூங்கவைத்த இளையராஜா...

நான் கல்லூரி செல்லும் வரை பாடல் கேட்கும் பழக்கமே இல்லை. அப்படியே கேட்டாலும் அது அப்போதைய ஹிட் பாடலாகவே இருக்கும்( ஓ.. போடு.. மன்மதராசா வகையறாக்கள் ). சன் மியூசிக் சேனல் ஆரம்பித்த போது பாட்டுக்கெல்லாம் ஒரு சானலா என்று திட்டி இருக்கிறேன்.கல்லூரிக்கு சென்ற பின் எல்லோருடனும் சேர்ந்து பாடல் கேட்க ஆரம்பித்தேன் .பழைய பாடல்கள் பிடிக்காது (கண்ணே கலை மானே போன்ற விதி விலக்குகளை தவிர).குறிப்பாக ரஹ்மான் பெரிதாக கவர்ந்தார் கொஞ்ச காலத்தில் என்னை முழுவதுமாக ஆட்சி செய்ய தொடங்கினார் என்றே கூறலாம் . பின் ஒரு இனிமை இல்லாத நாளில் தூக்கம் வராமல் நிலவை துணைக்கு அழைத்து கொண்டிருந்தேன் என் வெறுமையை போக்க.. அப்போது என் நண்பன் அவன் செல்லில் sleeping songs அப்டிங்கற foldar-ல் இருக்கும் பாடல்களை கேட்டால் தூக்கம் வரும் என்று சொல்லி கொடுத்தான் முதல் படலை கேட்டதும் தூங்கி விட்டேன்.அப்போது தான் இளையராஜாவின் ஆளுமை புரிய தொடங்கியது.அதன் பிறகு தூக்கம் வராத இரவுகள் எத்தனையோ அதில் எல்லாம் தூங்க வைத்தவர் இளையராஜா . அதில் முதன் மையானது அன்று கெட்ட அந்த முதல் பாடல்.அந்த பாடல் "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு". இளையராஜா சார் U ARE GREAT!!! அந்த பாடல் உங்களுக்காக இந்த படலை கூட வெறுப்பவர்கள் இருப்பார்கள என்ன......


ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே

(ஊரு சனம்..)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

நன்றி: peenamoodi.blogspot.com

Thursday, May 13, 2010

இளையராஜா பாடிய பாடல்களின் தொகுப்பு


இளையராஜா தனி பாடல்கள்
1 16 வயதினிலே - சோளம் வ்தக்கையிலே
2 ஆண்பாவம் - காதல் கசக்குதையா
3 ஆண்பாவம் - வந்தனம் வந்தனம்
4 ஆனந்தக்கும்மி - திண்டாடுதே ரெண்டு கிளியே
5 ஆவாரம் பூ - அலேலம் பாடி
6 ஆயிரம் வாசல் இதையம் - மனதார காதலித்தால் (துனுக்கு)
7 அக்னி நட்சத்திரம் - இராஜா ராஜாதி
8 அஜந்தா - எங்கே இருந்தாய்
9 அலைகள் ஓய்வதில்லை - தரிசனம் கிடைக்காதா
10 அம்மன் கோவில் திருவிழா - மாஞ்சோலை கிளியிருக்கு
11 அம்மன் கோவில் திருவிழா - நான் சொன்னால் கேளம்மா
12 அம்மன் கோவில் திருவிழா - தெய்வம் தந்த
13 அன்பே சங்கீதா - அடி ஆத்தா ஆத்தா
14 அன்பு கட்டளை - எங்கே சென்றாலும்
15 அன்பு கட்டளை - ஒரு கூடின் கிளிகள்தான்
16 அண்ணன் - கன்மனிக்கு வாழ்த்து பாடும்
17 அரண்மனைக்கிளி - என் தாயெனும் கோயில
18 அரண்மனைக்கிளி - இராமர நெனக்கும்
19 அதர்மம் - ஒரு பக்கம் நியாயம்
20 அது ஒரு கணா காலம் - காட்டுவழி கால்நடையா
21 அவதாரம் - சந்திரறும் சூரியரும்
22 அவதாரம் - ஒரு குண்டுமல்லி குலுங்குதடி
23 அழகர்மலை - கருகமனி கருகமனி
24 அழகர்மலை - உலகம் இப்போ எங்கோ
25 அழகி - உன்குத்தமா என்குத்தமா
26 பகவதி புரம் ரயில்வே கேட் - வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும்
27 பரணி - தேனா ஓடும் ஓடகரையில்
28 பரதன் - அழகே அமுதே பூந்தென்ற்ல்
29 பரதன் - நல்வீனை நாதம்
30 பாரதி - நின்னைச்சரன் அடைந்தேன்
31 சக்களத்தி - என்ன பாட்டு பாட
32 சக்களத்தி - வாடை வாட்டுது
33 சின்னக்கவுண்டர் - அந்த வானத்தபோல
34 சின்னக்கவுண்டர் - கண்ணுபடபோகுதையா
35 சின்னக்கவுண்டர் - சொல்லால் அடிச்ச சுந்தரி
36 சின்ன ஜமீன் - நான் யாரு எனக்கேதும்
37 சின்ன குயில் பாடுது - சின்னகுயில் ஒரு பாட்டு
38 சின்னத்தாயி - நான் ஏரிக்கரை மேலிருந்து
39 சின்ன வீடு - ஜாக்கிரதை ஜாக்கிரதை
40 சிட்டுக்குருவி - நீரோட ஆள காத்தோடும்
41 சிட்டுக்குருவி - பாரனஜனம் ஆடுதடி
42 தெய்வவாக்கு - இந்த அம்மனுக்கு எந்த
43 தேசியகீதம் - அம்மா நீயும்
44 தேசியகீதம் - அன்னல் காந்தி
45 தேசியகீதம் - ஏழபாழ
46 தேசியகீதம் - நன்பா நன்பா
47 தர்மா - இருகண்கள் போதாதே
48 தர்மா - இருகண்கள் போதாதே (சோகம்)
49 தர்மம் வெல்லும் - பூவோடு காற்றுவந்து
50 ஈரவிழி காவியங்கள் - பழைய சோகங்கல்
51 ஈரவிழி காவியங்கள் - தென்றல்டை தோரணங்கள்
52 எல்லமே என் ராசாதான் - வீனைக்கு வீனைகுங்சு
53 என் அருகே நீ இருந்தாள் - நிலவே நீவரவேண்டும்
54 என் பொம்முக்குடி அம்மாவுக்கு - காலெல்ளாம் நோகுதடி
55 என் பொம்முக்குடி அம்மாவுக்கு - கண்ணே நவமனியே
56 என் ஜீவன் பாடுது - எங்கிருந்தோ அழைக்கும்
57 என் மனவானில் - உன்னைத்தேடி வெண்ணிலா
58 என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு வந்த்தென்ன
59 என் ராசாவின் மனசிலே - பென்மனசு ஆழமுன்னு
60 என் ராசாவின் மனசிலே - சோளபசுங்கிளியே
61 என் உயிர் கண்ணம்மா - பூம்பாரையில் பொட்டு
62 எனக்காக காத்திரு - ஊட்டி மலைக்காட்டில்
63 எங்க ஊரு காவக்காரன் - எங்க ஊரு காவகாரா
64 எங்க ஊரு மாப்பிள்ளை - வலது காலை எடுத்து
65 எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாட்டுகாரா
66 என்னப்பெத்த ராசா - எல்லோருக்கும் நல்லவனக
67 என்னப்பெத்த ராசா - பெத்தமனசு சுத்த்திலும்
68 என்னை விட்டு போகாதே - எலூம்பாலே கூடுகட்டி
69 என்னை விட்டு போகாதே - பொண்ணப்போல ஆத்தா
70 எதிர் காற்று - சாமியாரா போணவனுக்கு
71 ஏழை ஜாதி - இந்த வீடு நாமக்கு
72 கீதாஞ்சாலி - துள்ளி எழுந்த்து பாட்டு
73 குணா - அப்பனென்ரும் அம்மை
74 ஐ ல்வ் இந்தியா - பாசம் வைத்த முல்லை
75 இங்கேயும் ஒரு கங்கை - பரமசிவன் தலையில்
76 இரண்டில் ஒண்ரு - நாரினில் பூ தொடுத்து
77 இரவு பூக்கள் - இந்த பூவுக்கொரு
78 இதயகோயில் - இதையம் ஒரு கோவில்
79 இதயம் - பொட்டு வைத்த ஒரு
80 ஜப்பானில் கல்யாணராமன் - காதால் உன் லீலையா
81 காக்கை சிறகினிலே - பாடித்திரிந்த எந்தன்
82 காதல் சாதி - என்ன மரந்தாலும்
83 காத்திருக்க நேரமில்லை - கஸ்தூரி மானே மானே
84 காவலுக்கு கெட்டிக்காரன் - காவலுக்கு கெட்டிகாரன்
85 கடலோர கவிதைகள் - தாஸ் தாஸ் சின்ன்ப்பதாஸ்
86 கைவீசம்மா கைவீசு - கைவீசம்மா கைவீசு
87 கைராசிக்காரன் - ஊமைமேகமே
88 கலிகாலம் - காலம் கலிகாலம் தான்
89 கண்ணா உன்னை தேடுகிரேன் - ஊருரங்கும் நேரத்தில்
90 கண்ணாத்தாள் - மாலை வெயில் அழகி
91 கண்ணுக்கொரு வண்ணக்கிளி - கானம்தான் காற்றோடு
92 கண்ணுக்கொரு வண்ணக்கிளி - யார் அழுது யார்
93 கண்ணுக்கு மைஎழுது - பூவே நீ நானாகவும்
94 கண்ணுக்கு மைஎழுது - சோகங்கள் கீதங்களோ
95 கரகாட்டகாரன் பாட்டாலே - புத்தி சொன்னா
96 கரகாட்டகாரி - என்ன பெத்த ஆத்தா
97 கரையெல்லாம் செண்பக்ப்பூ - காடல்லாம் பிச்சிப்பூவூ
98 கரிமேடு கருவாயன் - அட கதைகேலு கதை
99 கரிசக்காட்டுப்பூவே - வானம் பார்த்த கரிசக்காடு
100 கட்டபஞ்சாயத்து - தலைவன் ஒருத்தன்
101 கிழக்கு வாசல் - வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி
102 கிழக்கும் மேற்க்கும் - என்னேட உலகம் வேறு
103 கிழக்கும் மேற்க்கும் - கூட பொறந்த சொந்தமே
104 கிழக்கும் மேற்க்கும் - ஒரு கதிரிக்கா ஒத்த
105 கோடை மழை - துப்பாக்கி கையிலேடுத்து
106 கொக்கரக்கோ - கண் பாரும் தேவி
107 கோயில் காளை - தாய் உண்டு தந்தை உண்டு
108 கிருஷ்ணன் வந்தான் - மாடிழுத்த வண்டியெல்லாம்
109 கும்பக்கரை தங்கையா - என்னை ஒருவன் பாட
110 கும்பகோணம் கோபலு - என்ன ஜென்மம்
111 கும்பகோணம் கோபலு - ஒரு நந்தவனக்குயில்
112 கும்மிபாட்டு - பூங்குயிலே
113 குட்டி தங்கச்சி தங்கச்சி
114 மாயாபஜார் - ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரன்
115 மாயக்கண்ணாடி - காசு கையில் இல்லாட்டா
116 மாயக்கண்ணாடி - காதல் இன்று இப்போது
117 மகுடி - கரட்டோரம் மூங்கில் காடு
118 மைக்கேல் மதன காமராஜன் - கதை கேலு கதை கேலு
119 மலையூர் மம்பட்டியான் - காட்டுவழி போர பொண்ணு
120 மனைவி ரெடி - சினிமா பாத்து
121 மனைவி ரெடி - உண்ணை விடால்
122 மந்திரப்புன்னகை - காலிப்பெருங்காய டப்பா
123 மருதுபாண்டி - சிங்கார செல்வங்களே
124 மீண்டும் பராசக்தி - காட்டுக்குள்ள காளியம்மா
125 முள்ளும் மலரும் - மானினமே வண்ணப்பூ
126 முரட்டு கரங்கள் - காவலுக்கு சாமி உண்டு
127 முதல் மரியாதை - ஏ களியிருக்கு
128 முதல் வசந்தம் - ஆறும் அது ஆழமிள்ல
129 நான் கடவுள் - ஒரு காற்றில்’
130 நான் சிகப்பு மனிதன் - எல்லோருமே திருடங்கதான்
131 நான் சொன்னதே சட்டம் - கொலைகள் செய்தாள்
132 நாங்கள் - பாரடி குயில்
133 நானும் ஒரு இந்தியன் - சின்ன சின்ன புது
134 நாயகன் - தென்பாண்டி சீமையிலே
135 நல்ல நாள் - நல்ல நாள்
136 நந்தலாலா - மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
137 நந்தலாலா - தாலாட்டுக்கேட்க்க
138 நீ சிரித்தாள் தீபாவளி - பாசம் என்னும்
139 நீதானா அந்தகுயில் - கோட்டையில் குயிலிருக்கு
140 நிலவே முகம் காட்டு - தன்னந்தனியாக ஒரு
141 நினைவுசின்னம் - சிங்காரச்சீமையிலே
142 ஊரெல்லாம் உன் பாட்டு - ஊரெல்லாம் உன் பாட்டு
143 ஒரே ஒரு கிராமத்திளே - படிச்சது என்னத்த
144 ஒரே ஒரு கிராமத்திளே - வந்ந்துருச்சு வந்துருச்சு
145 பாண்டி நாட்டு தங்கம் - பாண்டி நாட்டுத்தங்கம்
146 பாட்டுக்கொரு தலைவன் - எல்லோருடைய வாழ்க்கையிளும்
147 படிச்ச புள்ள - பூங்காற்றே இனி போதும்
148 பகல் நிலவு - மைனா மைனா மாமன்
149 பகலில் பவுர்ணமி - மனமே அவன் வழும்
150 பணக்காரன் - மரத்த வச்சவன் தண்ணி
151 பணக்காரன் - உள்ளுக்குள்ள சக்கரவர்தி
152 பெரிய வீட்டு பண்னைக்காரன் - வந்தாரை வாழவைக்கும்
153 பெரியம்மா - இவள் தானே பெண்மனி
154 பெரியம்மா - புகழ் தானே
155 பிள்ளை பாசம் - விடிந்ததா பொழுது விடிந்ததா
156 பிதாமகன் - யாரது யாரது
157 பொங்கி வரும் காவேரி - இந்த ராசாவ
158 பொண்ணு ஊருக்கு புதுசு - ஒரு மஞ்சக்குருவி
159 பொண்ணு ஊருக்கு புதுசு - வீட்டுக்கு ஒரு மகன
160 பொண்ணு வீட்டுக்காரன் - நந்தவனக்குயிலே
161 பொண்ணுக்கேத்த புருஷ்ன் - ஜாதிமத பேதமின்றி
162 பொண்ணுமனி - ஹைய் வஞ்சிக்கொடி
163 பூவிலங்கு - ஆத்தாடி பாவாடை
164 பூமணி - எம்பாட்டு எம்பாட்டு
165 பூஞ்சோலை - காணக்குயிலே கண்ணுரக்கம்
166 பூந்தோட்ட காவல்காரன் - காவல்காரா காவல்காரா காடு
167 பூந்தோட்டம் - இனிய மலர்கள் மலரும்
168 பூந்தோட்டம் - வானத்தில் இருந்து
169 பூந்தோட்டம் - வானத்து தாரகையோ
170 பொறுத்தது போதும் - ஆராரோ பாடவந்தேனே
171 பிரியங்கா - நியாபகம் இல்லையோ
172 புண்ணியவதி - அடி பானிஞ்சா
173 புதிய ராகம் - மல்லிகை மாலைகட்டி
174 புதிய சுவரங்கள் - ஓ.. வானமுள்ள காளம்
175 புது நெல்லு புது நாத்து - பரணி பரணி பாடிவரும்
176 புது நெல்லு புது நாத்து - சலங்கை சத்தம்
177 புதுமைப்பெண் - கன்னியில சிக்கதையா
178 ராஜ கோபுரம் - ஞானத்தங்கமே
179 ரமணா - ஊருக்கொரு கச்சியும்
180 ருசி கண்ட பூனை - அன்புமுகம் தந்தசுகம்
181 சகல கலா வல்லவன் - அம்மன் கோயில் கிழக்காலே
182 சக்கரை தேவன் - நல்ல வெள்ளிக்கிழமையிலே
183 செம்பருத்தி - கடலிலேஎழும்புர அலைகல
184 செண்பகமே செண்பக்மே - வெளுத்து கட்டிக்கடா
185 செந்தூரம் - சின்னம்ணிக்காக்
186 சேது - வார்த்தை தவறி
187 சார் ஐ லவ் யு - உதிக்கின்ற செங்கதிர்
188 சிறையில் சில ராகங்கள் - ஏழு சுவரம் சேர்ந்து
189 சிவா - வெள்ளிக்கிழமை
190 சொல்ல மறந்த கதை - அம்மா சொன்னா
191 சொல்ல மறந்த கதை - ஜக்கம்மா
192 சொல்ல மறந்த கதை - பணம்மட்டும் வாழ்க்கையா
193 சொல்ல துடிக்குது மனசு - வாயக்கட்டி வயித்த
194 தாலாட்டு கேக்குதம்மா - அம்மா எனும் வார்த்தைதான்
195 தாலாட்டு பாடவா - சொந்தம் என்று வந்தவளே
196 தாய் மொழி - மதுரவீரன் சாமி
197 தலைமுறை - என்னபெத்த ராசா
198 தலையனை மந்திரம் - வானம்பாடி
199 தம்பிக்கு ஒரு பாட்டு - தாய் என்றும் தந்தை
200 தனம் - கட்டிலுக்கு மட்டும் தானா
201 தேடி வந்த ராசா - ராசாவை தேடிவந்த
202 தென்றல் சுடும் - கண்ணம்மா கண்ணம்மா
203 தெம்மாங்கு பாட்டுகாரண் - சின்ன சின்ன வார்த்தையிலே
204 திருநெல்வேலி - சாதி எனும் கொடுமை
205 திருப்புமுனை - அம்மான்னா சும்மா இல்லடா
206 திருப்புர சுந்தரி - ஓடம் ஒண்று காற்றில்
207 தொடரும் - சேர்ந்துவாழும் நேரம்
208 தூங்காதே தம்பி தூங்காதே - நானாக நானில்லை தாயே
209 துருவ நட்சத்திரம் - பெத்துப் போட்ட்தாரோ
210 துருவ நட்சத்திரம் - தாலி என்பதிங்கே
211 உள்ளே வெளியே - ஆரிராரோ பாடும் உள்ளம்
212 உன்னை நான் சந்தித்தேன் - தாலாட்டு மாரிப்போணதே
213 உன்னை சொல்லி குற்றமில்லை - கெட்டும் பட்டணம் போய்
214 உதயகீதம் - உதயகீதம் பாடுவேன்
215 உதிரிப்பூக்கள் - ஏ.. இந்த பூங்காத்து தாலாட்ட
216 உயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே
217 வால்மீகி - அச்சடிச்ச காச
218 வால்மீகி - என்னடா பாண்டி
219 வாழ்க்கை - மானமே நீ
220 வீர்தாலாட்டு - கதபோலத் தோணும் இது
221 வெள்ளையதேவன் - ஏத்திவச்ச குத்து விளக்கு
222 வெற்றிப்படிகள் - உன்னை காக்கும் தாய் போல்
223 விடிஞ்சா கல்யாணம் - காலம் மழைக்கலம்

இளையராஜா மற்றும் குழுவினர்
224 ஆண்டான் அடிமை - உந்தன் ராஜியதில் யாரும்
225 அறுவடை நாள் - ஒரு காவியம் அரங்கேரும்
226 சின்ன குயில் பாடுது - அப்பாவுக்கு பையன் வந்து
227 சின்ன ராமசாமி பெரிய ராமசாமி - அத்திரிபாச்சா கத்திரிகோலு
228 தெய்வவாக்கு - கத்துதடி ராக்கோலி
229 தேவன் - ஓ.. இந்த ஏழை கீதம்
230 தேவன் - தாலாட்டும் காத்தே
231 என் உயிர் தோழன் - தம்பி நீ நிமுந்து பாரடா
232 இது எங்கள் நீதி - நீதி இது எங்கள்
233 காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட
234 காமராஜ் - ஊருக்கு உழைத்தவன்
235 கண்ணாத்தாள் - அம்மன் புகழைப்பாட
236 கரகாட்டகாரன் - நந்தவனத்தில் வந்த
237 கருவேலம் பூக்கள் - ஏலே அட என்னலே
238 கவரிமான் - உள்ளங்கள் இன்பத்தில்
239 கேளடி கண்மனி - என்ன பாடுவது
240 மாயக்கண்ணாடி - ஏலே எங்கே வந்தே
241 மைடியர் மார்த்தாண்டன் - மைடியர் மார்த்தாண்டா
242 ஒரு நாள் ஒரு கணவு - காற்றில் வரும் கீதமே
243 பிக்பாகெட் - வேளை வேளை
244 பொண்டட்டி தேவை - யாரடி நான் தேடும்
245 பொண்ணு ஊருக்கு புதுசு - ஓரம்போ ஓரம்போ
246 பொண்ணுக்கேத்த புருஷ்ன் - ஜாதிமத பேதமின்றி
247 புலன்விசாரனை - இது தான் இதுக்குத்தன்
248 புதுப்பட்டி பொண்ணுத்தாயி - அழகான நம்ம பாண்டி நாட்டில்
249 சக்கரை பந்தல் - வேதம் ஓங்க
250 சேது - எங்கே செல்லும் இந்த பாதை
251 தென்பாண்டி சிங்கம் - வருகுதையா மறவர் படை
252 வா வா வச்ந்தமே - இந்த காதல் வந்து
253 வள்ளி - என்ன என்ன கனவு

இளையராஜா ஜானகி ஜோடி பாடல்கள்
254 அலைகள் ஓய்வதில்லை - வாழ்வெள்லாம்
255 ஆட்டோ ராஜா - சங்கத்தில் பாட்த கவிதை
256 அவதாரம் - அரிதாரத்த பூசிக்கொள்ல
257 பரதன் - புன்னகைல் மின்சாரம்
258 தெய்வவாக்கு - வள்ளி வள்ளி என் வந்தன்
259 தர்மபத்தினி - நான் தேடும் செவ்வந்திப்பூ இது
260 எல்லமே என் ராசாதான் - ஒரு சந்தன காட்டுக்குள்லே
261 என் அருகே நீ இருந்தாள் - இந்திரசுந்தரியே சொந்தம்
262 ஏழுமலையான் மகிமை - எந்த ஜென்ம மும்
263 ஏழுமலையான் மகிமை - கலிவரதா
264 இங்கேயும் ஒரு கங்கை - அன்னத்த நெனச்சேன்
265 கடலோர கவிதைகள் - அடி ஆத்தாடி இந்த
266 கடவுள் அமைத்த மேடை - ஏய் தண்ணி நானும்
267 கல்லுக்குள் ஈரம் - சிறு பொண்மனி அசையும்
268 கண்மனி - நேற்று வந்த காற்று
269 கரையெல்லாம் செண்பக்ப்பூ - ஏரியில எலந்தமரம்
270 கழுகு - பொண்ணோவிம் க்ண்டெனம்மா
271 மலையூர் மம்பட்டியான் - சின்னப்பொண்ணு சேலை
272 மனைவி ரெடி - ஜான்பிள்ளை ஆனாலும்
273 மெட்டி - மெட்டி ஒளி காற்றோடு
274 முந்தானை முடிச்சு - வெளக்கு வச்ச நேரத்துல
275 நாடேடி பாட்டுக்காரன் - ஆகாய தாமரை
276 நாடேடி தென்றல் - ஒரு கணம் ஒரு யுகமாக
277 ஊரு விட்டு ஊரு வந்து - சொர்கமே என்றாலும்
278 பகல் நிலவு - பூமாலையே தோள்சேரவா
279 பிரியங்கா - நியாபகம் இல்லையோ
280 புதுப்பாட்டு - நேத்து ஒருத்தர ஒருத்தர
281 சாமி போட்ட முடிச்சு - மாதுழங்கனியே நல்ல மலர்
282 தை பொங்கள் - கண்மலர்லளின் அழைப்பிதழ்
283 உறுதி மொழி - அமுதூரும் தேன் பிரையே
284 வண்ண வண்ண பூக்கள் - கண்ணம்மா காதலெணும்
285 அவதாரம் - தென்றல் வந்து தீண்டும்

இளையராஜா சித்ரா ஜோடி பாடல்கள்
286 அந்தப்புரம் - அழகே உன்முகம் பாராமல்
287 அறுவடை நாள் - தேவனின் கோவில் மூடிய
288 எங்க ஊரு மாப்பிள்ளை - என் காவிரியே கண்ணீர்
289 கீதாஞ்சாலி - மலரே பேசு மொனமொழி
290 கீதாஞ்சாலி - ஒரு ஜீவன் அழைத்த்து
291 கீதாஞ்சாலி - ஒரு ஜீவன் அழைத்த்து (சோ)
292 கிராமத்து மின்னல் - ரெட்டைகிளி சுத்திவந்த
293 கிராமத்து மின்னல் - வட்டு எடுத்த சோத்த
294 இதயகோயில் - ஊரோரமா ஆத்துப்பக்கம்
295 கண்களின் வார்த்தை - ஸ்ரீராமனே உன்னை சீதை
296 கரகாட்டகாரன் - இந்த மான்
297 தாய்க்கொரு தாலாட்டு - காதலா காதலா
298 தங்கமான ராசா - கண்ணே என் கார்முகிலே
299 வீர்தாலாட்டு - ஆலப்பிறந்த மகராசா
300 என் உயிர் தோழன் - மச்சி மன்னாரு
301 முதல் மரியாதை - அந்த நிலாவத்தான்
302 புண்ணியவதி - ஒரு ஆலம்பூவு அத்திப்பூவ
303 தங்க மாமா - வான்வெளியில் வண்ணப்பறவை

இளையராஜா பி.சுசிலா ஜோடி பாடல்கள்
304 கிருஷ்ணன் வந்தான் - தனியாக படுத்து
305 லக்‌ஷ்மி - தென்னமரத்துல் தென்றல்
306 நீதியின் மறுபக்கம் - பொட்டிக்கடையிள
307 பொங்கி வரும் காவேரி - மன்னவன் பாடும்
308 பாடாத தேனீக்கள் - ஆதி அந்தம்

இளையராஜா சைலஜா ஜோடி பாடல்கள்
309 எல்லாம் இன்பமயம் - ஒன்னும் ஒன்னும்
310 மனிப்பூர் மாமியார் - ரசிகனே என் அருகில் வா
311 பொண்ணு ஊருக்கு புதுசு - சாமக்கோழி கூவுதம்மா
312 பொண்ணு ஊருக்கு புதுசு - உனக்கேன தானேஇன்நேரமா
313 வீர்தாலாட்டு - அம்மன் கோயில் வாசலிலே


இளையராஜா சுஜாத்தா ஜோடி பாடல்கள்
314 அண்ணன் - ஆலமரத்து குயிலே குயிலே
315 அண்ணன் - வயசுப்புள்ள வயசுப்புள்ள
316 காதல் கவிதை - ஏ..கொஞ்சிப் பேசி கோவம்
317 கவலைப்படாதே சகோதரா - திருஓனத்திருநாளும் வந்தல்லோ
318 பூமணி - தோல்மேல தோல்மேல

319 ஆணழகன் - நில்லாத வெண்ணிலா - இளையராஜா & உமாரமணன்
320 பகவதி புரம் ரயில்வே கேட் - செவ்வரலி தோட்ட்த்துல - இளையராஜா & உமாரமணன்
321 பாட்டு பாடவா - நில் நில் நில் பதில் - இளையராஜா & உமாரமணன்
322 வைதேகி காத்திருந்தாள் - மேகங் கருக்கையிலே - இளையராஜா, உமாரமணன் & குழுவினர்
323 ஈரவிழி காவியங்கள் - என் கானம் இன்று அரங்கேரும் - இளையராஜா & ஜென்சி
324 பகலில் ஒரு இரவு - தோட்டம் கொண்ட ராசாவே - இளையராஜா & ஜென்சி
325 அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் பாடும் - இளையராஜா, ஜென்சி & குழுவினர்
326 நாயகன் - நிலா அது வானத்து - இளையராஜா & சசிரேக்கா
327 அலைகள் ஓய்வதில்லை - விழியில் விழுந்து - இளையராஜா, சசிரேக்கா & குழுவினர்
328 இளையராஜாவின் ரசிகை - மலைச்செவ்வானம் - இளையராஜா & சொர்ணலதா
329 என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு வந்த்தென்ன (சே) - இளையராஜா & சொர்ணலதா
330 கண்களும் கவிபாடுதே - மாலைநிலா - இளையராஜா & மஞ்சரி
331 மாது - கேட்க்கலியோ நெஞ்சின் - இளையராஜா & மஞ்சரி
332 சிறையில் சில ராகங்கள் - கல்லுடைக்க ஆளில்லாம - இளையராஜா & சுனந்தா
333 தாலாட்டு - எனக்கென ஒருவரும் - இளையராஜா & சுனந்தா
334 அஜந்தா - யாரும் தொத ஒன்ரை - இளையராஜா & ஸ்ரேயா கோசல்
335 பாரதி - நின்னைச்சரன் அடைந்தேன் - இளையராஜா & பாம்பே ஜெயஸ்ரீ
336 தேவதை - நாள்தோரும் எந்தன்கண்னிள் - இளையராஜா & கவிதா கிருஷ்ணமூர்த்தி
337 புதுப்பாட்டு - எங்க ஊரு காதலபத்தி - இளையராஜா & ஆஷா போன்ஸ்லே
338 ரமணா - வானவில்லே வானவில்லே - இளையராஜா & சாதனா சர்கம்
339 செந்தூரம் - உன் பக்கத்தில ஒரு - இளையராஜா & மாலா
340 தனம் - கூத்து ஒன்னு கூத்து - இளையராஜா & பெஜி
341 தெம்மாங்கு பாட்டுகாரண் - என் ஜீவன் தானே உந்தன் - இளையராஜா & பவதாரிணி
342 வால்மீகி - ஒளிதரும் சூரியனே - இளையராஜா & பேலா ஷிண்டி
343 நாங்கள் - நம்ம பாசு தேவதாசு - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
344 பாசப்பறவைகள் - மாப்புள மாப்புள - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
345 புது புது அர்த்தங்கள் - அழகான மனைவி அன்பான - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
346 உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - முந்தி முந்தி நாயகரே - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
347 வாழ்க வளர்க - ஈசுவரனே ஈசுவரனே - இளையராஜா, மலேசியா வாசுதேவன் & குழுவினர்
348 நிலவே முகம் காட்டு - பூங்காத்து - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
349 பாட்டு பாடவா - வழிவிடு வழிவிடு - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
350 புது புது அர்த்தங்கள் - எடுத்து நான்விடவா - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
351 உடன் பிறப்பு - சோழர் குழ - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
352 கீதாஞ்சாலி - கிளியே கிளியே என் - இளையராஜா & கங்கை அமரன்
353 தீர்த்தகாரையினிலே - உசாரையா உசாரு - இளையராஜா & கங்கை அமரன்
354 நானே ராஜா நானேமந்திரி - தாய் அவளின் திருத்தாள் பனிந்தே - இளையராஜா, கங்கை அமரன் & குழுவின்ர்
355 திருநெல்வேலி - திருநெல்வேலி சீமையிலே - இளையராஜா & மனோ
356 பாரதி - நல்லதோர் வீனை - இளையராஜா, மனோ & குழுவின்ர்
357 தேவர் மகன் - போற்ற்ப்பாடடி பொண்ணே - இளையராஜா, மனோ & குழுவின்ர்
358 இரட்டை ரோஜா - பொம்பளங்க கையில் - இளையராஜா & அருன்மொழி
359 காதலுக்கு மரியாதை - ஐயா வீடு தொறந்து தான் - இளையராஜா & அருன்மொழி
360 ஆனந்தராகம் - கடலோரம் கடலோரம் - இளையராஜா & கே.ஜே. ஏசுதாஸ் & குழுவினர்
361 இன்னிசை மழை - மங்கை நீ மாங்கனி - இளையராஜா & எஸ். என். சுரேந்தர்
362 கண்னி ராசி - சோறுன்னா சட்டி - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி & குழுவினர்
363 நந்தலாலா - ஒரு வாண்டு கூட்டம் - இளையராஜா & யத்தீஸ்வர்
364 நிலவே முகம் காட்டு - தென்றலை கண்டுகொள்ளம்மா - இளையராஜா & ஹரிஹரன்
365 தலைமுறை -எங்க மகராணிக்கு - இளையராஜா & ஸ்ரீநிவாஷ்
366 அலைகள் ஓய்வதில்லை - வாடி என் கப்பகிழங்கே - இளையராஜா, கங்கை அமரன், ஜென்சி & குழுவின்ர்
367 பரணி - நடு ராத்திரியில் சுத்துதடி - இளையராஜா, சங்கர் மஹாதேவன், சொர்ணலதா & குழுவினர்
368 எங்க ஊரு காவக்காரன் - சிறுவனி தண்ணிகுடிச்சு -இளையராஜா, சைலஜா & சுனந்தா
369 கோபுரங்கள் சாய்வதில்லை - பூவாடை காற்று - இளையராஜா, கிருஷ்ணசந்தர், ஜானகி & குழுவினர்
370 இதயம் - ஏப்ரல் மேயிலே - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர் & குழுவினர்
371 காதல் கவிதை - தகத்தோம் - இளையராஜா, அருன்மொழி & சொர்ணலதா
372 கல்லுக்குள் ஈரம் - தோப்பில் ஒரு நாடகம் - இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி & குழுவினர்
373 கண்ணா உன்னை தேடுகிரேன் - கொங்சும் குயில் பாட்டு - இளையராஜா, ஹரினி & அணுராதா ஸ்ரீராம்
374 கவலைப்படாதே சகோதரா - ஈஸ்வர அல்லா - இளையராஜா, மனோ & யுகேந்திரன்
375 கிருஷ்ணன் வந்தான் - அண்ணே அண்ணே - இளையராஜா, மனோ & பி. சுசிலா
376 மனம் விரும்புதே உன்னை - காட்டுகுயில் காட்டை - இளையராஜா, ஹரிஹரன், பவதாரிணி & குழுவினர்
377 நாடேடி தென்றல் - மணியே மணிக்குயிலே - இளையராஜா, மனோ & ஜானகி
378 ஒரு நாள் ஒரு கணவு - காற்றில் வரும் கீதமே - இளையராஜா, ஹரிஹரன், பவதாரிணி, ஸ்ரேயா கோசல் & சாதனா சர்கம்
379 பகல் நிலவு - நீ அப்போது பாத்தபுள்ளை - இளையராஜா, மலேசியா வாசுதேவன், சைலஜா & குழுவினர்
380 புண்ணியவதி - ஒனக்கொருத்தி பொறந்துருக்கா - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனித்தா & குழுவினர்
381 ராஜா கையவச்சா - மருதாணி அரச்சேனே - இளையராஜா, மனோ & ஜானகி
382 ராசய்யா - திண்டுக்கல்லு திண்டுக்கல்லு - இளையராஜா, அருன்மொழி, மின்மினி & குழுவினர்
383 ரமணா - வானவில்லின் பேரைமாற்றவா - இளையராஜா, ஹரிஹரன், & சாதனா சர்கம்
384 தாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர் & குழுவினர்
385 தாய்க்கொரு தாலாட்டு - அலையில மிதந்த்து - இளையராஜா, மலேசியா வாசுதேவன், பி. சுசிலா & குழுவினர்
386 திருநெல்வேலி - இனி நாளும் திருநாள் தான் - இளையராஜா, அருன்மொழி & சொர்ணலதா
387 வெள்ளை ரோஜா - நாகூரு பக்கத்தில - இளையராஜா, மலேசியா வாசுதேவன், சைலஜா & குழுவினர்
388 விருமாண்டி - கர்ப்பகரகம் விட்டு - இளையராஜா, கமலஹாசன், கார்த்திக், திப்பு & குழுவின்ர்

நன்றி: rakkamma.com & thiraipaadal.com