Sunday, July 12, 2015

இளையராஜாவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், ஏ.வி.எம்.
 
இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏ.வி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

"அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.

இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏ.வி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.

அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

"இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.

என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.

ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.

இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்'' 

என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.

இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.

வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.

பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.

அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக் 

காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.

இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.

அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.

அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.

அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.

பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.

பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.

பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!

தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.

இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.

பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.

இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.

பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி 

விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.

நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.

"எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.

"டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.

"இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.

"தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.

உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.

"இது சரியாக இருக்கிறது'' என்றேன்.

அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.

ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.

சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.

அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.

அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''

இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.

இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.

இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''
Thanks Malai Malar
http://www.maalaimalar.com/2015/04/18220955/cinema-history-april-18-ilayar.html

Monday, January 7, 2013

இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறாரா?


ராஜா ஏன் தன்னுடைய இசை கலைஞர்களை அவருடைய ஒலி நாடாக்களில், ஒலிப் பேழைகளில் முன்னிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொருட்டு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

பல வருடங்களாகவே ஒரு எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்களில் ராஜா மீது கொட்டும் நெருப்பு என்னவென்றால், அவர் தன்னுடைய படைப்புகளுக்குரிய Credit அனைத்தையும் அவரே பெற்றுக்கொள்கிறார், அவருடைய இசை கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை, அவருடைய பாடல்களின்  CD, Cassette, LP Record  போன்றவற்றில் “இசை – இளையராஜா” என்று தான் இருக்கிறதேயன்றி, புல்லாங்குழல் இன்னாருடைய மூச்சு காற்று, கிடார் அன்னாருடைய விரல் வித்தை, வயலின் இவர் தான் வாசித்தார், வீணை மீட்டய பெருமகனார் இவரே என்று யாருடைய பெயர்களையும் போடாமல் அழிச்சாட்டியம் செய்கிறார் என்பதே. வேறு ஒரு இசையமைப்பாளருக்கு சர்வதேச விருது கிடைத்த போது, அவரை பாராட்டி எழுத ஒரு பிரபல வார இதழ் இவரை அணுக, இவரோ அந்த இசையமைப்பாளரை பாராட்டுவதை விட்டு, இளையராஜாவை திட்டுவதற்கு மட்டுமே அக்கட்டுரையை பயன்படுத்திக்கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட ”திட்டுப் பொருள்” இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறார் என்பதே. அவ்விருது பெற்றவர் மட்டுமே தன்னுடைய மகுடத்தில் அனைத்து கற்களையும் பொதித்து அழகு பார்க்கிறார், ராஜா அவ்வாறு இல்லை என்பதே அவரின் வாதம்.

சரி, கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். எவ்வளவோ இசை மேதைகளை தமிழ் திரையுலகம் சந்தித்திருக்கிறது. அதில் ஒருவர் 
திரு. எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள். அவருடைய இசைக்குழுவில் பாடகர்கள், பாடகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோருக்கு தெரிந்த ஒரே பிரபலமானவர் திரு. சதன் அவர்களே. இந்த இந்த இசைக்கருவிகளை இன்னார், இன்னார் தான் வாசிக்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

மேலும் 1970ல் எம்.எஸ்.வி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஆல்பத்தின் பெயர் M.S.V ORCHESTRATION. இந்த ஆல்பம் HMV நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் எந்த இசைக்கலைஞர் பெயரும் வெளியிடப்பவில்லை. மேலும் இசை கலைஞர்களை  In Lay cardல் வெளியிடும் பழக்கம் தொன்று தொட்டு தமிழ் திரைவுலகில் இருந்தது இல்லை. கே.வி. மகாதேவன் இசையமைத்த படங்களில் “உதவி .. புகழேந்தி” என்று போடுவார்கள். அது போல விஸ்வநாதன் இராமமூர்த்தி படங்களில் உதவியாளர்கள் பட்டியலில் ஜி.கே. வெங்கடேஷ் பெயர் இடம்பெற்றது. விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்களில் தாஸ் டேனியல், கோவர்தனம், ஜோஸ்ப் கிருஸ்ணா போன்றோர் பெயரும், இடம்பெற்றிருந்தது. எவ்வளவோ பேர் விஸ்வநாதனிடத்து பணியாற்றியும் அவர் இசைக்குழுவில் அடையாளம் காணப்பட்ட நபர் சதன் மட்டுமே. 

ஆனால் ராஜாவிடத்து நிலைமை வேறு. இதற்கிடையில் ராஜா பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் வாசித்து வந்தார், உதவியாகவும் இருந்தார். ராஜாவின் தனித்தன்மை, இசை ஆளுமை, திறமை ஆகியவற்றை அவர் வேலை புரிந்த இசையமைப்பாளர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அந்த திறமைக்கு சான்றாக திரு.கோவர்தன் இசையமைத்த வரப்பிரசாதம் திரைப்படத்திற்கு மட்டும் Title Cardல் இசை..கோவர்தன், உதவி … ராஜா என்ற அங்கீகாரம் கிடைத்தது . ஆனால் வி.குமாரின் இசையில் வந்த சில பாடல்கள் ராஜாவே இசையமைத்தது. ஆனால் ராஜாவின் பெயர் அப்படங்களின் Title Cardல் வெளிவரவில்லை. சினிமா துறை அவ்வாறு தான் இருந்தது.. இவ்விதமான School of Thought இருந்த காலத்தில் பணியாற்றிய ராஜா, தனி இசையமைப்பாளர் ஆன பின் தனக்கென ஒரு பிரத்யேக இசைக்குழுவை அமைத்துக்கொண்டார்.

‘Guitar           --- Mr.Sadanandam, Mr.Sasidhar
Tabla            --- Mr.Prasad,
Violin            --- Mr. Prabakar, Mr. Juddy
Keyboard         --- Mr. Viji Manuel
Drums           --- Mr. Purushothaman
Cello            --- Mr.Sekar
Flute            --- Mr. Napolean
Other Instruments   -- Mr.Jaycha Singaram
Chrorus          -- Mr.Saibaba,.
Other Help        -- Mr.Sundarrajan
போன்றோர் மேற்சொன்ன இசைக்கருவிகளோடு அடையாளம் காணப்பட்டார்கள். மேலும் அக்காலக்கட்டத்தில் பாடல் கேட்பதென்றால் பெரும்பாலானோருக்கு வாய்த்த, வயப்பட்ட ஒரே ஊடகம் வானொலி தான். InLay Cardல் இவர்கள் பெயர் இல்லாமல் இருந்தபோதே இக்கலைஞர்களை தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், இயக்குனர்கள் அடையாளம் கண்டுக்கொண்டனர். 

மேலும் மக்களுக்கு வானொலி கேள்வி ஞானத்திலேயே எந்தெந்த இசைக்கருவிகள்,  பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அடையாளம் கண்டுக்கொண்டார்கள். இது ராஜாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. புல்லாங்குழல் எது, வீணை எது, கிடார் எது, சிதார் எது என்று மக்கள் அடையாளம் கண்ட காலம் ராஜாவின் இசை பிரவேசத்திற்கு பின்பே. சரி, திரை கலைஞர்களுக்கு, திரை உலகு சம்பந்தப்பட்டவர்களுக்கு இக்கலைஞர்களை தெரியும், மக்களுக்கு தெரிந்ததா என்ற நியாயமான கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ராஜாவின் பாடல்களில் எல்லாவிதமான இசைக்கருவிகளும் பயன்படுத்தும் போது அவர் தனி தனியாக இவர் தான் இசைத்தார் என்று வெளியிடவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கலைஞரின்  Solo Performance வரும்போது, அக்கலைஞரின் பெயரை முன்னிறுத்துவதில் ராஜா முன்னோடியாக இருந்திருக்கிறார். 

உதாரணமாக 1981ல் வெளிவந்த ராஜ பார்வை படத்தின் Recordல் வயலின் கலைஞர் திரு. வி.எஸ். நரசிம்மன்  பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் புதிர் என்ற படத்தில் வரும் முதல் முத்தம் தான் என்ற பாடலின் Instrumental Version வாசித்தவரான திரு.சந்திரசேகர் ( திரு.புருஷோத்தம் அவர்களின் சகோதரர்) அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.அவரின் பெயர் செல்வி படத்தில் வரும் இளமனது பாடலின் Instrumental Versionக்கும் இடம்பெற்றிருந்தது 

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் Band Music, தில்லானா மற்றும் நாதஸ்வரம் ஆகியவற்றை வாசித்த மதிப்பிற்குரிய சேதுராமன் மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் பெயர் அப்படத்தின்  Title cardல் இடம்பெற்றது ஆனால் இப்படத்தின் 78 rpm (Revolutions per minute) Columbia Record மற்றும்  45 rpm Angel Recordல்  இவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் 1981ல் இசை ஞானியின் இசையில்  வெளிவந்த கோயில் புறா படத்தின் Recordல் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி அவர்களின் பெயர் வெளிவந்தது.   

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் 1986ல் வெளியான “How to Name It” ஆல்பத்தில் இசை கலைஞர்களின் முழுப்பட்டியல் இருந்தது.


 மேலும் “Nothing But Wind” ஆல்பத்தில் புல்லாங்குழல் கலைஞர் செளராச்சியா பெயரும் இடம்பெற்றிருந்தது.

 என்ன சொல்ல வருகிறேன் என்றால், பாடல்கள் அல்லாமல் வெறும் இசைக்கருவிகளைக் கொண்டே நிகழ்த்தப்படும் எந்தவொரு arrangementக்கும் ராஜா அந்த கலைஞர்களுக்குரிய மரியாதையை செய்ய தவறியதில்லை. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பேர்ப்பட்ட திறமையான இசைக்கலைஞரும், ராஜாவின் இசைக்குறிப்புக்களையே (Notes) வாசிக்கிறார், அந்த Notesக்குரிய இசை வடிவம், ஒலி அளவு ஆகியவற்றை கொண்டு வர மெனக்கெடுபவர் ராஜா மட்டுமே. அந்த இசை வடிவத்தை இன்னார் தான் கொண்டு வருவார் என்று தீர்மானிப்பவரும் ராஜா தான். எனவே அவர் கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை என்ற பொய் வாதம் எடுபடாது. அவ்வாறு அங்கீகாரம் கிடைப்பதால் தான் அன்னக்கிளியில் அவரோடு இணைந்து பணியாற்றிய இசை வல்லுனர்கள் இன்று வரை அவரோடு தொடர்கிறார்கள்.

இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு தனியாக, பிரத்யேகமான இசைக்குழு என்ற ஒன்று கிடையாது, எனவே Cassette, CD Cardகளில் அவர்களுக்கு வாசிக்கும் நபர்களின் பெயரை வெளியிடுகின்றனர். அதுவும் அக்கலைஞர்கள், இசையமைப்பாளரின் “Notes”க்கு வாசிப்பதில்லை. உதாரணத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் என்ன செய்வேன் என்றால் கிடார் வாசிக்க வரும் நபரிடம், ”தன் தனா, லா லா லே ரம் பம் பம்” என்று பாடிக் காட்டி, இதற்கு வாசிக்க வைப்பேன். அவ்வாறு வாசித்தப்பின் அதை கணினியில் மிக்ஸ் செய்து, பவுடர், பூ, மை எல்லாம் இட்டு ஒரு மாதிரி output வர வைப்பேன். எனவே அந்த கிடார் கலைஞனின் பெயரை நான் வெளியிட வேண்டும்.

ஆனால், ராஜா அப்படியல்ல, என்னென்ன வாத்திய கருவிகள் வேண்டும், எந்த ஒலி வடிவம் வேண்டும், எந்த கால அளவுக்குள் அவை இருக்க வேண்டும் போன்ற மொத்த சமாச்சாரங்களையும் தீர்மானித்து அதற்குரிய Notes எழுதி, அதை முன்னின்று மேற்பார்வையிட்டு, ஒலிப்பதிவு வரை முடித்து வைப்பவர் ராஜா அவர்கள். 

மேலும் அவர் 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் ஜெயா டி.வி.க்காக நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையில் ஒவ்வொரு இசை கலைஞரின் பங்களிப்பையும், அவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் அவரிடம் பணியாற்றுகிறார்கள்  என்பதையும் உரைத்தார். தம்முடைய கலைஞர்கள் மட்டுமன்றி, ஹங்கேரி மட்டும் இங்கிலாந்து நாட்டு கலைஞர்களையும், அவர்களின் மேன்மையையும் விலாவாரியாக மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அவர் என்றும் கூற தவறுவதில்லை. 

இப்படிப்பட்டவரா  இசை கலைஞர்களை புறக்கணிக்கிறார், கவுரவிக்க தவறுகிறார் என்று சொல்கிறார்கள்? முடிவை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

Tuesday, September 18, 2012

இத்தாலியர் தேடிய இளையராஜா

இத்தாலியில் இருக்கும் Bologna என்ற ஊரில் உள்ள கடைவீதி ஒன்றில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன், கடையில் இருந்து ஒலித்த ஒரு பாடலைக் கேட்கிறான். கேட்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால் எந்தக் கடையிலிருந்து பாடல் வந்தது என்று அவனுக
்குத் தெரியவில்லை. ஒவ்வொரு கடையாக விசாரிக்கிறான். ஒரு வழியாகக் கடையைக் கண்டுபிடித்து, ”ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் போட்டீர்களே? அந்தப் பாடலை மறுபடியும் கேட்கவேண்டும்” என்று சொல்லி தேடித் தேடி ஒருவழியாகப் பாடலையும் கண்டுபிடிக்கிறான். ‘இது எந்த ஊர் பாடல்? எங்கிருந்து வந்தது இந்த இசை?’ என்று கடைக்காரரிடம் விசாரிக்கிறான். ‘இது சென்னையில் இருந்து வந்தது’ என்கிறார் கடைக்காரர். 

விமானம் ஏறுகிறான். வந்திறங்குகிறான் சென்னையில். அந்தப் பாடலை உருவாக்கியவரைச் சந்தித்தே தீருவது’ என்று எண்ணி அவர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, ஒரு வழியாய் சந்திக்கிறான். Bologna’வில் வருடா வருடம் தான் நடத்தும் Angelica Music Festival’க்கு அவரை அழைக்கிறான். அவரும் அவன் வேண்டுகோளை ஏற்று, Italyல் Concert நடத்தித் தந்தார்.

ஏதோ ஒரு தேசத்தில் எதற்காகவோ சுற்றிக்கொண்டிருந்த ஒருவனை அப்படிச் சுண்டி இழுத்து இங்குக் கூட்டி வந்த அந்தப் பாடல் ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை”.

- ”யூகியுடன் யூகியுங்கள்” நிகழ்ச்சியில் திரு. யூகிசேது கூறியது.


Saturday, August 25, 2012

இசைஞானி ரசிகர்களின் சங்கமம்... ஒரு வித்தியாசமான இசை அனுபவம்!

-எஸ் ஷங்கர்
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு அறிவுஜீவி முதல் மோழி பிடித்து நிலத்தை உழும் உழைப்பாளி வரை அனைவரும் ரசிகர்கள்தான். நல்லிசையின் காதலர் யாராக இருந்தாலும் அவர்கள் ராஜாவின் இசைக் காதலர்களாக இருப்பார்கள்!
 
ஒரு முறை வேலூர் தாண்டி நாட்றம்பள்ளி என்ற ஊர் வழியாக செல்லும்போது, இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராஜா நற்பணி மன்றம் என்ற பெயர்ப் பலகையைக் காண நேர்ந்தது. நாட்றம்பள்ளியில் மிகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. அப்படியே பெங்களூர் சென்று சேர்வதற்குள், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி என முக்கிய இடங்களில் ராஜாவின் ரசிகர் மன்ற பலகையைக் காண முடிந்தது.

உலகிலேயே ஒரு இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் வைத்து தீவிரமாக இயங்குவது அநேகமாக இளையராஜாவுக்குத்தான் இருக்கும்.
வட மாவட்டங்களில் இப்படி என்றால்... மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னும் எத்தனையோ வடிவங்களில் ராஜாவுக்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமில்லையே.
மன்றம் வைத்துதான் ராஜா இசையை அனுபவிக்க வேண்டியதில்லை. முகம் தெரியாமல், ரசனையின் அடிப்படையில் மட்டுமே இணையதளம் மூலம் ஒரு குழுவாக இயங்குபவர்களும் உண்டு.
அப்படி உருவானதுதான் இசைஞானியின் தீவிர ரசிகர்களைக் கொண்ட யாஹூ குழு.  இந்தக் குழு பற்றி ஏற்கெனவே ஒன்இந்தியா விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்களுடன் இயங்கும் குழு இது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்குப் பிறகு, ஆன்லைனில் இளையராஜாவுக்கு மட்டும்தான் இப்படி ஒரு தீவிர ரசிகர்கள் குழு உள்ளது.
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு இந்தக் குழுவை உருவாக்கினார். சும்மா அவர் இசை அப்படி, இப்படி, ஆஹா, ஓஹோ என்று பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் குழுவல்ல இது.
அவரது இசையின் உன்னதங்களை, அவர் சொல்ல முயன்ற விஷயத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆராதிக்கிற ரசனையான ரசிகர்கள் நிறைந்த குழு இது!
ராஜா பெரியவரா... அவருக்கு யார் போட்டி... அவருக்கு இந்த விருதெல்லாம் கிடைக்கவில்லையே என்ற ரசிக மனோபாவத்தை வென்ற ரசிகர்கள் இவர்கள் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுவே உண்மை.
இந்தக் குழுவில் உள்ளவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ஏன் கடல் தாண்டியும் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு தருணத்தில் இவர்களில் வர முடிந்தவர்கள் மட்டும் பங்கேற்று ஒரு சந்திப்பை நிகழ்த்துவது வழக்கம்.
இதுவரை 24 முறை சந்தித்த இந்தக் குழுவின் வெள்ளி விழா சந்திப்பு... 25வது சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கெல்லீஸில் நடந்தது.
அதில் நாமும் பங்கேற்றோம்... ஒரு செய்தியாளராக மட்டுமல்ல... ராஜாவின் ரசிகராகவும்!
ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ராஜா தன் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது. இந்த சந்திப்பில் ராஜாவின் சினிமா இசை அல்லாத, பக்தி ஆல்பங்கள் குறித்து விவாதித்தனர்.
ராஜாவின் புகழ்பெற்ற கீதாஞ்சலி மற்றும் ரமணமாலைதான் ரசிகர்களின் முதல் விவாதத்துக்கான ஆல்பங்களாக அமைந்தன. ராஜாவின் மிக சமீபத்திய ரமணர் ஆல்பமான 'ரமணா சரணம் சரணம்' குறித்தும் விவாதித்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த டாக்டர் ஸ்ரீதர் இளையராஜாவின் அபாரமான ரசிகர். ரமணமாலையின் பாடல்கள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்து கொண்ட விதத்தை, கண்களை மூடி, மனமுருக அவர் பாடிய விதத்தை... கண்டிப்பாக இசைஞானி பார்த்திருக்க வேண்டும். அந்தப் படைப்பின் அர்த்தத்தை அங்கே உணர முடிந்தது!
ராஜாவின் இன்னொரு ஆல்பமான மணிகண்டன் கீதமாலையை அணுஅணுவாக ரசித்துப் பாடி மகிழ்ந்தனர். பெங்களூரிலிருந்து வந்திருந்தார் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர். பெயர் ராகா... குரலில் இளம் மணிகண்டனை தரிசித்த அனுபவம். உடம்பெல்லாம் ஒரு ரோமாஞ்சனம் என்ற பாடலை அந்தப் பெண் பாடி முடித்த போது, கேட்டவர் அத்தனைபேர் உடம்பின் மயிர்க்கால்களும் சிலிர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இருமுடி கட்டி சபரிமலைக்குப் போகும் ஒவ்வொருவரும் கேட்டுப் பரவசமடைய இளையராஜா அந்த ஆல்பத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார். இருமுடிகட்டி.. என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை இந்த கூட்டத்தில் பரவசத்தோடு பாடியவர்... அன்வர் என்ற இளைஞர்!
"மதங்களைக் கடந்த இசை இது. எல்லா மதமும் சொல்வது ஒரே தத்துவத்தைத்தான் என்பதை இசைஞானி இந்தப் பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார்," என்றார் பாடி முடித்ததும்.
சாய் பாபாவுக்காக ராஜா உருவாக்கிய பாபா புகழ்மாலையில் இடம்பெற்ற உன்னைக் கேட்டுப்பார்... என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம்... இது ரசிகர்களை அதிகமாகப் போய்ச் சேரவில்லையோ என்ற சின்ன வருத்தம் மேலோங்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில், அந்தப் பாடலை ஸ்ரீதரும் அன்வரும் பாடிப் பாடி விவாதித்த விதம் அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களை சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது ராஜாவின் இசையமுதம்!





'விண்ணார் அமுதே வீசும் சுடரே ஓதும் மறையே ஓதாப் பொருளே...' என்று ஒரு பாடல்... எந்த கணத்தில் கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் மெட்டு. இறைவனை எப்படி ஒவ்வொரு கணமும் புதிதாய் உணர்கிறோமோ... அப்படி எப்போது கேட்டாலும் புத்தம் புதிதாகத் தெரியும் மெட்டு. இந்தப் பாடலையும் ராகாதான் பாடினார். அசாதாரண நிசப்தத்துக்கிடையே ஒலித்த அந்தச் சிறுமியின் குரல் இறைவனின் இருப்பையே அந்தப் பாடல் வழி உணர்த்துவதாக இருந்தது!
இன்னும் கீதாஞ்சலி, திருவாசகம் பற்றியெல்லாம் விவாதித்தாலும், இவற்றை விரிவாக அனுபவித்துப் பேச இன்னொரு கூட்டம் போடணும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவருமே ராஜாவின் இசையை முழுமையாக லயித்து உணர்ந்தவர்கள்தான். சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தன் மனைவி ஜெயலலிதா மற்றும் மகனோடு கூட்டத்துக்கு வந்திருந்தார். ஓசூரிலிருந்து வந்திருந்தார் உஷா சங்கர். டாக்டர் நந்தா, திருச்சி செந்தில் குமார் (ராஜாவின் முரட்டு பக்தர்- ஆனால் ஏகப்பட்ட விஷயம் உள்ளவர்), ஆடிட்டர் கிரிதரன், வேல்ரமணன் உள்பட அனைவரும் திருவாசகம் தொடங்கி ராஜாவின் ஆன்மீக இசையை அழகாக அலசினர்.
டாக்டர் விஜய்யுடன் இணைந்து இந்த கூட்டத்தை அழகாக ஒருங்கிணைத்தார் நரசிம்மன்.
டாக்டர் விஜய்...
நாம் டாக்டர் விஜய்யைச் சந்தித்தோம்... வெறும் பட்டம் பெற்ற டாக்டரல்ல இவர். கோவை சாய்பாபா காலனியில் பிரபலமான மருத்துவர். தன் பணிநேரம் போக, மற்ற நேரத்தை ராஜாவின் பாடல்களில், அவரது நல்ல ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் செலவிடுபவர்.
இந்த குழு குறித்து நம்மிடம் கூறுகையில், "இணையதளம் என்ற கான்செப்ட் அறிமுகமான காலகட்டத்தில், பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கும். அதிலெல்லாம் நானும் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்பேன். ஆனால் என் வருத்தமெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்ந்து, அடுத்தவரை மட்டம் தட்டும் போக்குதான்... இப்படி வரும் விவாதங்களில் யார் நடுநிலையோடு இருக்கிறார்களோ...அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி, ஒருங்கிணைக்க முயன்றேன். அப்படி ஒவ்வொருத்தராகப் பார்த்துப் பார்த்து சேர்த்து உருவான குழுதான் இந்த இளையராஜா யாஹூ குரூப்ஸ்!
இளையராஜா என்ற மகத்தான கலைஞரின் படைப்புகளை முழுமையாக உள்வாங்கி ரசிக்க வேண்டும். அது பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் பிரதான நோக்கம்.
இந்தக் குழுவிலும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதுபோல, யார் பெரியவர் என்பது போன்ற, ராஜாவுக்கு உரிய விருதுகள் வரவில்லையே என்பது போன்ற கருத்துகள் வராமலில்லை. ஆனால் அவற்றை நானோ இந்தக் குழுவின் மற்ற மாடரேட்டர்களோ வளரவிட்டதேயில்லை. ஆரம்பத்திலேயே நீக்கிவிடுவோம்..." என்றார்.
இதற்கு முன் 2009-ல் இந்தக் குழு கூடியபோது, இளையராஜா இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 20 திரைப்பட ஆல்பங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் குறித்து மட்டும் விவாதித்துள்ளனர்.
ஒவ்வொரு கூட்டத்தின்போதும், இதுதான் டாபிக் என முடிவு செய்துவிடுவீர்களா?
"ஆமாம்... ராஜா சார் இசை ஒரு சமுத்திரம் மாதிரி. எல்லையில்லாமல் விரியும் ராஜ்யம் அது. ஒரு நாளில் பேசி முடிக்கிற விஷயமா அவரது இசை? எனவே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விவாதிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் இப்படி..!", என்றார் டாக்டர் விஜய்.
இத்தகைய கூட்டங்கள் விவாதங்கள் தாண்டி, இந்த குழு செய்திருக்கும் ஒரு விஷயம், இசைஞானியின் திருவாசகம் ஆரட்டோரியா உருவாக்கத்துக்காக, தங்களால் முடிந்த பல பணிகளை, தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். 30 பேர் கொண்ட குழுவே வேலை பார்த்திருக்கிறது. திருவாசகம் வெளியான அன்று நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரட்டி ராஜாவிடமும் கொடுத்துள்ளனர்.
ராக்கம்மா கையத்தட்டு பாடல் பிபிசியின் ஆல்டைம் டாப்டென்னில் இடம் பிடித்ததல்லவா... அந்தப் பாடலுக்கு பிபிசி அங்கீகாரம் கிடைக்கச் செய்ததில் இந்தக் குழுவின் பங்களிப்பும் உண்டு!
நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, August 16, 2012

இளைஞர்களை சந்திப்பேன்... என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்! - இசைஞானி இளையராஜா


இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.
இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.
அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.
அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'
"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.
உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.
உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.
இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

Monday, July 23, 2012

நீயா நானா இல்லை இல்லை நீயும் நானும்

22 ஜூலை 2012 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா 80களின் இசையும் வாழ்வும்......

Monday, June 4, 2012

இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்

 நன்றி: மின்மலர்


இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட மராட்டி மொழி படமான ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன். மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது. 
பாடல்கள் பார்க்க :

பாடல் 1

பாடல் 2

பாடல் 3

பாடல் 4

பாடல் 5

பாடல் 6

தீம் மியூசிக்