Thursday, August 16, 2012

இளைஞர்களை சந்திப்பேன்... என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்! - இசைஞானி இளையராஜா


இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.
இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.
அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.
அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'
"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.
உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.
உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.
இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

No comments:

Post a Comment